பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்47


இனி நடப்பதைப் பார்ப்போம் என்றனர்

பல்லவரும் வியப்புறவே நீரில் ஆடிப்

பளிச்செனவே மின்னலிட அண்ணல் கோமான்

நல்லவர்கள் எல்லாரும் சூழ அன்பு

நாடியவர் உறவினர்கள் இல்லம் புக்கார்

சொல்லஅருஞ் சிறப்புடைய உறவால் நட்பால்

சுடரொளியார் முகம்மதுவே இவர்தாம் என்று

மெல்லஅவர் உணர்ந்தாலும் இனிமேல் ஆகும்

விளைவுதனை உள்ளத்தால் நினைத்துச் சோர்ந்தார். 49

உறவினர்கள் ஆமினாவை

மக்காவுக்கு அனுப்பி வைத்தனர்

கள்ளத்துக் காபிர்கள் நிறைந்த ஊரில்

கலைமுகத்து முகம்மதுவைத் தங்க வைத்தால்

எள்ளத்தான் படுவார்கள்; நமக்கும் கூட

இழிவைத்தான் செய்வார்கள்; அதனால் குத்தும்

முள்ளைத்தான் மடிக்குள்ளே கட்டி வைக்கும்

முறையில்தான் ஆகிடுவோம்” என்றே எண்ணி

பிள்ளைதாய் இருவரையும் மக்கா வுக்கே

பிழையின்றி அனுப்பிவிட முடிவு செய்தார்; 50

ஆமினா புதல்வரொடு புறப்பட்டார்

அடிக்கும்மத் தளத்துக்கும் கைக்கும் நோக்கா(டு)

ஆகாத படிஎடுத்த மொழிகள் தேர்ந்து

துடிக்கும்தாய் மனத்துக்கும் தூய ரான

தோன்றலுக்கும் உரித்தான வகையில் பேசிக்

கடிக்கும்பாம் பன்னவர்கள் கொடுக்குத் தேள்போல்

கழறும்சொல் காபிர்கள் நிலையைக் கூறி

முடிக்கும்முன் முகம்மதுவை ஏந்திக் கொண்டு

முழுநிலவாம் ஆமினாவும் புறப்பட்டாரே. 51