பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்461


5. இறைவன் பேரொளி அருள் பரவிய படலம்

முந்நூறு பேர் முதல் தொழுகைக்குச் சென்றனர்

அண்ணல் தபூக்குப் போர்முடித்தே அல்லா இல்லக் ககுபாவில்
வண்ண மாக முசுலிம்கள் வணங்கும் தொழுகை நடத்திவர
எண்ணமிட்டார்; அதற்கேற்ப இதயம் விரும்பும் அபூபக்கர்
தண்ணல் லாரின் தலைமையிலே முந்நூற்றுவரை அனுப்பி வைத்தார்; 1

இறைவன் திருஉரை வெளிப்பட்டது

பெரிய புனிதப் பயணத்தைப் பெருமை யோடு மேற்கொண்டோர்
அரிய மக்கா நகர் நோக்கி அகமே மகிழ்ந்து சென்றதன்பின்
புரியா உருவச் சிலைவணங்கும் புகழே இல்லாச் செயல்விலக
விரியும் ஒளியோன் அல்லாவும் விளக்க மான உரைதந்தான். 2

அலீயாரை அண்ணலார் அனுப்பினார்

இறைவன் தன்சீர் உரைகேட்டே ஏந்தல் நபியார், அலீயாரை
“விரைவாய்ச் சென்று ககுபாவில் விளங்கும் புனிதப் பயணத்தார்
நிறைவாய் ஈகம் முடித்தவுடன் நெருங்கி இறைவன் திருமொழியின்
மறைவாய் விளக்கம் தனைஎடுத்து மலர்க”எனவே அனுப்பிவைத்தார்; 3

முசுலிம்களே ககுபாவில் நுழையலாம்

இனியோர் சொன்ன சொற்படியே ஏற்ற காலம் அது கண்டு
பனிவாய்ச் சொல்லார் அலீயாரும் பரமன் உரையை வெளியிட்டார்
தனியன் அல்லா தனை ஏற்றோர் தவிர மற்றோர் எவரெனினும்
இனிமேல் இறைவன் இல்லத்துள் இணங்கி நுழையக் கூடாது. 4

ஆடை இன்றி இறை இல்லம் சுற்றக் கூடாது

ஆடை யின்றிக் ககுபாவை ஆரும் சுற்றக் கூடாது
தேடிக் கொண்ட உடன்படிக்கை திங்கள் நான்கில் முடிந்துவிடும்
நீடும் துன்பம் வருமென்றால் நெருங்கிக் காக்கும் பொறுப்பதுவும்
பீடார் அல்லா தனக்கும் அவன் பெருந்தூ தர்க்கும் இலை என்றார். 5