பக்கம் எண் :

462துரை-மாலிறையன்

பலர்இசுலாத்தில் இணைந்தனர்

அறிவிப் பிதனைக் கேட்டவுடன் அல்லா பெருமை உணர்ந்தவர்கள்
சிறிதும் காலம் கடத்தாமல் சிறப்பாய்க் கலிமா தனைஓதி
நெறியிற் சிறந்த(து) அருட்குர்ஆன் நெறியே என்று முழுதுணர்ந்தும்
அறிவால் அன்பால் அகந்தன்னால் அருஞ்சொல் கூறி வணங்கினரே. 6

எங்கெங்கும் உருவ வழிபாடு அகன்றது

எங்கும் நிறைந்த அல்லாவின் எழிலை உணர்ந்த நல்லார்கள்
தங்கும் இறைவன் இல்லத்தைச் சார்ந்த இடங்கள் எங்கெங்கும்
அங்கும் உருவ வழிபாட்டை அடியோ டுதறித் தள்ளினரே
பங்குக் கேற்ற கட்டாயப் பணமாம் சக்காத் தீந்தனரே! 7

அபிசினியா மன்னர் மறைந்தார்

உற்ற நட்பால் உளம்கலந்தும் உதவி பலவும் செய்ததவம்
உற்ற “நஜ்ஜாஷி” என்னும் உயர்ந்த அரசர் பணியாவும்
முற்றப் புரிந்து கடவுளடி முன்னே சென்றார் எனக் கூறி
நற்ற வத்தார் முகம்மது கோன் நல்லோர்க் காகத் தொழுதாரே! 8

ஆதீம் தாய் சிறந்த வள்ளல்

வந்தார்க் கெல்லாம் வழங்குவதில் வலியன் எதிரில் வந்தவர்கள்
நொந்தார் என்றால் நொடிப்போதில் நோய்கள் தீர்க்கும் அருள்வள்ளல்
செந்தண் மனத்தான் ஆதீம்தாய் சிறந்த மாந்தன் இருந்தாலும்
நந்தாத் தீமைப் பண்புடைய நயமில்லாத சேய்பெற்றான். 9

ஆதீம் தாயின் மகன் அதீ கொடியன்

மைந்தன் தீய மனம்கொண்டு மறைந்த தந்தை பெயர்தேய்த்தான்
பைந்தார் வேந்தர் முகம்மதுவைப் பழித்தான் இசுலாம் நெறிவளர்வால்
நைந்தான் நாளும் நலம்கெட்டு நாணம் விட்டுச் செயல்பட்டான்
ஐந்தாம் படையும் தானாகி அழிக்கத் துடித்தான் அண்ணலையே! 10

முசுலிம்படை எழுந்தது

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தநபி பொறுமைக் கெல்லை அதுகண்டு
வெறுத்துப் பேசும் விழலோனை விலங்கிட்டிடுக எனச் சொன்னார்
மறுத்துப் பேசா அலீயாரும் மறவர் படையோடு உடன்சென்று
கறுத்துப் போர்செய் தன்னவனைக் கலக்கிச் சிறையிட் டுடன்வந்தார்; 11