பக்கம் எண் :

468துரை-மாலிறையன்

நேரில் கண்டவர் ஒளி பெற்றனர்

குழுக்குழு வாக வந்து குற்றத்தை விரிவாய்க் கூறி
முழுக்கவும் இசுலாம் தன்னை முளைவிடா தழிப்போம் என்னும்
அழுக்குளத் தோடு வந்தும் அகம்மதை நேரில் கண்டே
ஒழுக்கமும் உயர்ந்தோ ராகி ஒளிபெற்றார் கலிமா ஓதி; 42

குறைசியர் அச்சமூட்டினர்

தூயநல் ஏமன் மண்ணின் துபைல் எனும் பெரியார் மக்கா
போயினர்; போன நாளில் பொல்லாத குறைசி யர்கள்
“நேயரே! நெருங்கி வந்தீர் நீர்முகம் மதுவைக் காணின்
ஆயநற் பெருமை யாவும் அழியவே பெறுதல் திண்ணம். 43

செவிகளை அடைத்துக் கொள்க

அன்னவர் உரைகள் யாவும் அழிப்பதற் கான பொய்யே
சின்னவர் சில்லோர் அந்தச் சிறுமையுள் மாட்டிக் கொண்டார்
முன்னவர் வந்த போதும் முகத்தினைத் திருப்பிக் கொள்க
என்னவர் சொலவந் தாலும் இருசெவி அடைத்துக் கொள்க;” 44

திருக்குர்ஆன் உரையைக் கேட்டார்

என்றவர் கூறி ஏய்த்தார்; இனியவர் தாமும் சொல்லிச்
சென்றவர் சொல்லைக் காத்தார்; சின்னாளும் சென்ற பின்னே
அன்றவர் சொன்ன வாறே அண்ணலும் நல்லோர் முன்னே
வென்றொளிர் திருக்குர் ஆனை விளக்கமாய் ஓதுங் காலை; 45

ஆ! ஆ! இதுவே நல்லுரை

செவி அடை பட்டிருந்த செம்மலாம் துபைல்நல் லாரும்
அவிர்ஒளித் திருக்குர்ஆனின் அருளொளி சிறிதே கேட்கச்
செவியினுள் அடைத்த பஞ்சைக் சிக்கென நீக்கிக் கேட்டார்
புவியினில் இதனைப் போலப் புகழுரை இல்லை” என்னும்; 46

தீன் நெறியைப் பின்பற்றினார்

உயர்வினைப் புரிந்து கொண்டும் ஒளியனாம் அல்லா மாண்புப்
பெயரினை நெஞ்சுள் வைத்தும் பிழையிலார் தூதர் என்னும்
வியன்புகழ் தனைநினைந்தும் விரைந்தோடி நபியார் பாத
இயல்பினை நயந்து போற்றி இனிய தீன் நெறியைச் சார்ந்தார்; 47