பக்கம் எண் :

474துரை-மாலிறையன்

ஐந்து கடமைகள் சொன்னீரா?

ஐயனும் “ஆம் ஆம்” என்னும் அவ்விடை தனையே தந்தார்
பையவே வந்த பேரும் பகர்ந்தனர் சக்காத்துக்கும்
ஐயமாய் நோன்பு - கச்சுப் பயணத்தைக் குறித்தும் அந்தச்
செய்யவர் மீண்டும் கேட்டார் செம்மலார் அமைதியாக; 78

என் பெயர் லுமாம்

அத்தனை வினாவி னுக்கும் “ஆம்” எனும் விடையே தந்தார்
இத்தனை வினாக்கள் கேட்டோர் இறுதியில் தம் பேர் கூறி
ஒத்துள தன்குல த்தின் உறுபெயர் தானும் கூறி
எத்துணை அளவு தாங்கள் இயம்பினீர் அதைநான் கேட்டேன்; 79

தங்களைப் பின்பற்றுகிறேன்

கூறிய செய்தி தன்னைக் கூட்டியோ குறைத்தோ செய்யேன்
தேறினேன் என்று கூறித் தெம்புடன் விரைந்து சென்று
மாறிலாத் தமது மக்கள் மாண்புற, “உருவணக்கம்
நேரிலாச் செய்கை என்று நெஞ்சினை விளக்கி வைத்தார். 80

இந்த வகையிலும் இசுலாம் வளர்ந்தது

உளங்கொளச் சொன்ன அந்த உயர்ந்தவர் உரையைத் தேறி
விளங்கொணா வாழ்வில் நின்று வாடிய அவ்வினத்தார்
நலங்கொள எண்ணி அன்பு நபியாரின் பெருமை பேணி
விளங்குசீர் இசுலாம்ஆகி வெற்றியைச் சூடிக் கொண்டார்; 81

ஆண்டவனை வேண்டினார் அண்ணல்

“தாயிப்பில் வாழுகின்ற தகீப்பெனும் குலத்தி னாரை
ஆயநன் னெறியில் உய்க்க ஆண்டவா!” என்றார் அண்ணல்
நேயரின் வேண்டல் தன்னை நிறைவேற்ற இறைவன் எண்ணித்
தூயதன் அருளை அந்தத் தொகுதியார் அறிய வைத்தான்; 82

அண்ணலார் புகழை அறிந்தனர்

சிறந்தஅக் குலத்தி னார்க்குள் சிறந்தவர் ஒருவர் அன்பு
நிறைந்தவர் இப்னு மசுஊத் என்பவர் நெடிய நாளாய்ப்
புறந்தரும் நபிகள் கோமான் புகழினை அறிந்தி ருந்தார்
அறந்தரும் வகையன் னாரும் அண்ணலின் நெறியைச் சேர்ந்தார்; 83