பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்485


சரப்பு என்னும் இடத்தில் குளித்தார்

இறுதியில் சரஃபு என் கின்ற இடத்தினில் குளித்துத் தூய
உறுதியும் கொண்டு துல்கச்சு உயர்திங்கள் நான்காம் நாளில்
மறுவிலா ஞாயிறன்று மகம்மது மக்கா சென்றார்
இறைவனின் நெறியில் நின்ற எண்ணிலாப் புகழி னாலே! 12

மக்காவினர் அண்ணலாரைக் கண்டனர்

மக்காவை நோக்கி அன்பு மகம்மது வந்தார் என்றே
மிக்கார்வம் கொண்டு மக்கள் மிகுநல மழலைச் சேய்கள்
தக்கார்கள் ஒன்று கூடித் தலைத்தலை ஓடி வந்து
புக்கார்கள் ஆங்கே வானப் புகழினோர் வந்தார் என்றே! 13

இம் மண்ணுக்குச் சிறப்பைத் தருக

கண்ணிலால் கண்டார் மக்கா ககுபாவை அண்ணலாரே
எண்ணிலாப் பேரின் பத்தால் இதயமே கனிய நின்று
“பண்ணுலாம் இறைவா! இந்தப் பன்னருஞ் சீர்த்தி மிக்க
மண்ணினுக் குயர்வை இன்னும் மதிப்புடன் தருக” என்றார். 14

சபாக் குன்றின் மேல்ஏறிக் கூறினார்

பின்னும்நற் சபாக்குன் றின்மேல் பெருமானார் ஏறிநின்று
“தன்னிக ரில்லா வானத் தனியவன் இறைவன் அல்லால்
மன்னியோர் எவரும் இல்லை மாண்புகழ் அனைத்தும் அந்த
மன்னவன் தனக்கே ஆகும் மாந்தரே!” என்று கூறி; 15

இறைவன் அனைத்து உதவிகளையும் செய்தான்

தொடர்ந்தனர் மேலும், “எல்லாத் தூயநற் பொருள்கள் மீதும்
அடர்ந்தசீர் வலிமை கொண்டான் ஆண்டவன் ஒருவன் யாவும்
கடந்தவன் அவனே வாய்மை கனிந்தவன் அடிய னேற்கும்
உடனிருந் துதவி செய்தான் ஒட்டாரைத் தோற்கச் செய்தான் . 16

அரஃபாத் குன்றில் ஏறிச் சொற்பொழிவு செய்தார்

எனப்பல வாறு வானத் திறைவனை வேண்டிப் பின்னர்
மனமேவி அரஃபாத் தென்னும் மாமன்றில் இருந்து மக்கள்
இனத்தினைக் கவரும் வண்ணம் இனிய சொற்பொழிவு செய்தார்
அனைவரும் ஒருமை யாய்வெள் ளாடையே அணிந்தார் ஆங்கே! 17