பக்கம் எண் :

486துரை-மாலிறையன்

லப்பைக் லப்பைக் எனும் ஒலி முழங்கியது

மணிஇடத்திருந்த மக்கள் மாண்பொடும் இறையை நோக்கி
“அணியமாய் உள்ளோம் உள்ளோம் ஆண்டவா!” என்று கூறும்
தனிஒலி “லப்பைக் லப்பைக்” எனும் ஒலி முழங்கி நின்றார்
இனிவரும் காலம் எல்லாம் இவ்வணம் முழங்கு தற்கே! 18

இனியும் இவ்வாய்ப்பு வாராது

மக்களை நோக்கி நின்று மகம்ம(து) ஆங்குரை செய்தார்கள்;
“மக்களே! எனது சொல்லை மதிப்புடன் செவி மடுப்பீர்!
ஒக்கலே! இந்த வாய்ப்போ இனிவரப் போவ தில்லை;
சிக்கல்இல் லாமல் வாழச் சிலவற்றைக் கூறு கின்றேன்; 19

தூயராய் வாழ்வோம்

“தூயநாள் தூய மாதம் தூயநன் னகரம் தன்னில்
தூயராய்த் தோழர் எல்லாம் தோன்றியே இருக்கின்றோம் நாம்
தூயராய் வாழ்ந்து வானத் தூயனை வாழ்த்தி மேலும்
தூய்மையே பெருகுமாறு தூயவான் சேரு வோமே! 20

இறைவன் கணக்குக் கேட்பான்

மண்ணிலே வாழ்ந்து பின்னர் வானினை அடையும் போது
எண்ணிக்கை யற்றுச் செய்த எவ்வகைச் செயல்களுக்கும்
எண்ணிக்கைக் கணக்குக் கேட்பான் இறையவன் அந்த நாளில்
மன்னிக்க என்று சொன்னால் மதிப்பில்லை தண்டம் உண்டாம்; 21

நடந்தவை போகட்டும் இனி நல்லவை ஆகட்டும்

நன்னெறி பற்றி வந்த நாளுக்கு முன்னர்ச் செய்த
புன்னெறி எவற்றி னையும் பொறுத்திட வழிகள் உண்டு
பொன்னெறி என்று நீங்கள் போற்றியே கொண்ட இந்த
மன்னெறி இசுலாம் என்று மனத்தினில் உறுதி கொள்வீர்! 22

மனைவிமாரை அன்புடன் நடத்துக

அவரவர் மனைவி மாரை அன்புடன் நடத்த வேண்டும்
உவகைகொண் டவர்கள் தம்மேல் உரிமைகொண் டாடுகின்றீர்
அவர்களும் உரிமை கொள்ள ஆண்டவன் ஆணை உண்டு
தவறிலாப் பெண்கள் தம்பால் தகும்பொறை காட்டு” கென்றார். 23