பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்489


எனை விரும்புவோர் அலீயையும் விரும்புக

“ஆண்டவா! அடியேன் தன்னை அன்புசெய் தார்கள் எல்லாம்
மாண்டசீர் அலீதன் னையும் மதிப்புடன் விரும்ப வேண்டும்
ஈண்டென இயம்பி ஏந்தல் எழிற்கதீர் கமிலி னின்று
தோன்றெழில் மதினா நோக்கித் தோழர்கள் சூழச் சென்றார். 36

மதினா திரும்பினார்

புனிதப் பயணம் மேற்கொண்ட புகழ்வான் தூதர் பெருமகனார்
இனிதாய் முசுலீம் மக்கள்முன் இன்பக் காட்சி வழங்கியபின்
பனிவாய்த் தோழர் சூழ்ந்துவரப் பணிவாய் மதீனா சென்றார்கள்
முனிவாய் இருந்த குறைசியரும் முகமன் கூறி அனுப்பி வைத்தார். 37

உகுதுப் போரில் இறந்தவர்

பொருட்டு வேண்டுதல் நடத்தினார்

மதினா மண்ணை மிதித்தவுடன் மலைந்த உகுதுப் போரின்கண்
அதிரப் பொருது மறைந்துபுகழ் அடைந்த வீரத் தோழருடல்
புதைந்தி ருக்கும் இடம்சென்று புரிந்தார் தூய வேண்டுதலே!
எதிரில் இருந்த முசுலீம்கள் எல்லாம் கலந்து நெகிழ்ந்திடவே! 38

இறைநெறியை மறவாதீர்

மற்ற முசுலீம் தோழரிடம் மணிவாய் நபிகள் பெருமானார்
உற்ற முசுலீம் தோழர்களே! உலக இயலில் ஒன்றிப் போய்ச்
சற்றும் இறைவன் மாண்புதனைத் தவறிக்கூட மறவாதீர்
குற்றம் குற்றம் பல உருவைக் கும்பிட் டொழிந்து போகாதீர்! 39

அழிவு வழியை நாடாதீர்கள்

கொலைகள் செய்து குருதியினைக் கொட்ட வைக்கும் செயல்தீய
வலையுள் மாட்டும் செயலாகும் வாழ்க்கை அழியும்; அமைதியுள
நிலைதான் என்றும் நலம்செய்யும் நீங்கள் புரிந்து கொள்க என
நலமே விளையும் வழிமுறையை நவின்றார் நபிகள் நாயகமே! 40

மீண்டும் இறந்தவர்க்காக வேண்டினார்

மதினா சென்ற பதினோராம் ஆண்டில் சகுபர் திங்கள்தனில்
மதிக்கும் பதினோ ராம்ஓர் நாள் மறைந்தார் உறங்கும் இடுகாட்டில்
மதிநேர் முகத்து நபி நல்லார் மகமதியார்தம் ஆவிநலம்
அதனை அடைய இறைவன்முன் அருளுக்காக வேண்டினரே! 41