பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்49


ஆமினா மறைவை அப்துல் முத்தலிப்பு அறிந்தார்

அன்னையினைப் பிரிந்துளசேய் தனித்தி ருக்கும்

அந்நிலைமை எலாம்விளக்கி மடலைத் தீட்டி

மன்னரெனும் அப்துல்முத் தலிப்பு நல்லார்

மனம்கொள்ள அனுப்பிவைத்தார்; செய்திகேட்ட

பின்னர்அந்த மாண்புடையார்நிலை குலைந்தும்

பெருகுநலம் தாம்இழந்தும் சோர்ந்து வீழ்ந்தும்

இன்னலுற்றும் ஒருவாறு தெளிந்த பின்னர்

ஈசனவன் செயல்எண்ணிப் பேசல் உற்றார்; 55

அண்ணலாரை அழைத்துப் போக ஆள்கள் வந்தனர்

பனித்திருக்கும் கண்ணுடைய உறவோர் தம்மைப்

பரிந்தழைத்து “நீவிர்போய் அபூவா ஊரில்

தனித்திருக்கும் முகம்மதுவை அன்னை இன்றித்

தளர்ந்திருக்கும் நறுமலரைத் தேற்றி நெஞ்சம்

இனித்திருக்கும் வகைசெய்தே கொணர்க” என்றார்

இணைந்திருக்கும் உறவினர்க்குள் சிலர் எழுந்தே

அனைத்தினுக்கும் முன்னொளியை நெருங்கிக் காண

அபூவாவின் சிற்றூர்க்கு விரைந்து போனார். 56

புதல்வரைக் கண்டு முத்தலிப்பு மகிழ்ந்தார்

வண்ணமுறச் சுவர்பட்டு மீண்டு வந்த

வகைப்பந்து போல்அவர்கள் மக்கா வந்தார்;

அண்ணலவர் முன்அப்துல் முத்தலிப்பும்

அன்புமனம் மிகக்கொண்டு தழுவி அந்த

விண்ணகமே வரப்பெற்ற நிலையர் ஆகி

விளம்புமொழி பலவற்றால் கலக்கம் போக்கிக்

கண்ணொளியே! விண்ணொளியே! என்று வாழ்த்திக்

கரைகண்ட புயற்கலம்போல் மகிழ்ச்சிகொண்டார்; 57