பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்491


எந்தப் பேற்றினை ஏற்றுக் கொள்வீர்?

“கடவுட் பணியில் தலைநிற்கும் கடமை மாறா நல்லோரே!
கடவுள் ஒருநாள் அடியவர்பால் கனிவாய் ஓர்நல் கருத்துரைத்தார்
நடக்கும் இம்மை உலகத்தின் நற்பேறுகளா? அன்றிஇனிக்
கிடைக்கும் மறுமை தனில் இறைவன் கெழுநற் பேறா? எதைஏற்பீர்? 48

மறுமையில் இறைவன் பேறே வேண்டும்

எனவே கேட்டான்; அவ்வடியான் இந்த வையப் பேறெல்லாம்
கனவாய் முடியும் இறைவன்அருள் கனிவால் கிடைக்கும் பேறெனிலோ
வினைத் துன்பத்தைப் போக்கிநலம் விளைக்கும் எனத்தீர் மானித்தான்
இணையில் லாத இறை பேறே இனிக்கும் என்றும் அவன் சொன்னான்; 49

அபூபக்கர் அழுதார்

மணிவாய் நபியார் இம்மொழியை மாந்தர் முன்னே கூறியதும்
பிணிவாய் நிற்கும் பெருமானார் பேசும் இந்தக் கருத்தெண்ணிப்
பணிவாய் நின்ற அபூபக்கர் பதறித் துடித்து நம்பெருமான்
துணிவாய்க் கூறும் இவ்வுரையால் தோன்றும் பிரிவைக் குறித்தாரே; 50

பிரிவை எவ்வாறு தாங்குவேன்?

பிரிவை எவ்வா றொப்பிடுவேன் பின்னும் வாழ்க்கை வேறுளதோ?
விரிவை யத்தின் வெவ்வினையில் வெந்து பட்டுச் சாவதுவோ?
பரிவை இந்த உலகத்தில் பயிர்செய் யத்தான் வந்தவர்நட்
புறவை இழந்து வாழுவதும் உயர்வோ? என்றார் அபூபக்கர். 51

அபூபக்கரே எனக்கு உற்ற தோழர்

மேலும் தொடர்ந்த பெருமானார் “மேன்மை யோரே! இவ்வுலகில்
காலம் எல்லாம் என்னோடும் கலந்து வாழ்ந்த தோழர்களுள்
சால உரிமை பெற்றவரே சலியா அன்பர் அபூபக்கர்
மேலோர் ஆவார்” எனக்கூறி மிகுந்த உரிமை அளித்தார்கள். 52