பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்493


இல்லத்திலிருந்தே இறைபணி இயற்றினார்

என்னும் திருக்குர் ஆன் மறையை இயம்பிப் பள்ளி வாசல்தனை
அண்ணல் நீங்கிச் சென்றார்கள் அதற்குப் பின்னர்த் தொழுகைக்கு
மன்னும் பள்ளி வாசல்தனில் மகம்மதொளியார் வரவில்லை
இன்னும் இறைவன் பணிதன்னை இல்லத் திருந்தே இயற்றினரே! 58

யார் வீட்டில் தங்குவது?

ஒவ்வோர் துணைவி யாரகத்தும் ஒவ்வோர் நாளே தங்கிடுவார்
அவ்வா றியங்கும் நபியண்ணல் அரிய நோய்வாய்ப் பட்டதுவும்
செவ்வையாகச் சென்று வரும் செயல்மேற் கொள்ள வாய்ப்பில்லை
எவ்வா றினியும் செல்வதென எண்ணிச் சொல்க” எனக் கேட்டார் 59

ஆயிசா வீட்டில் தங்குக

பிராட்டி யார்கள் எவ்வெவரும் பெருமான் தங்கள் நிலை எண்ணிப்
“பராவும் பெருமை மிகப்பெற்ற பணிவு மணியாம் ஆயிசாநற்
பிராட்டி இல்லம் தங்குவதே பெருமை” என்று கூறி அவர்
“இராவும் பகலும் அவரில்லம் இருக்க வேண்டும்” எனச் சொன்னார். 60

வரி வாங்கச் சாம் நகர்க்குப் படை அனுப்பினார்

வரிதா ராமல் ஏய்த்திருந்த வாய்மை மறந்த சாம்நாட்டை
உரிய முறையில் தண்டிக்க ஒருபோர்ப் படையை எழச் செய்தார்
விரிவாய் இருந்த அப்படையின் வெற்றித் தலைமைப் பொறுப்பேற்கப்
பெரியார் தமையே குறிக்காமல் பெருமான் “உசாமா” தமைக்குறித்தார். 61

பாத்திமா காதில் ஏதோ உரைத்தார்

எளியோர் தமையும் மதிக்கின்ற ஏற்றப் பண்பு பெற்றிருந்த
ஒளியா நெஞ்சத் துயர் பெருமான் ஒருநாள் மகளார் பாத்திமாவை
விளியா நின்றார் அம்மணியும் விரைவாய் அருகில் ஒட்டிவரத்
தெளிவாய்க் காதில் உறும்வகையில் திருவாய் மலர்ந்தார் நாயகமே! 62