பக்கம் எண் :

494துரை-மாலிறையன்

துன்பமும் இன்பமும்

ஒருபோழ் துரைத்த சொல்கேட்டே உடனே அழுதார் மகளார்;பின்
மறுபோழ்து ரைத்த சொல்கேட்டு மகிழ்ந்து சிரித்தார் அம்மகளே!
இருபோழ் துற்ற நிலைகண்ட இனியார் ஆயிசா அம்மை
சிறுபோழ் தினிலே இத்தகைய சிணுங்கும் சிரிப்பும் ஏன்? என்றார். 63

ஏன் அழுதாய்? ஏன் சிரித்தாய்?

பெருமான் அவர்கள் “பிணிதன்னால் பிரிவேன்” என்றார் அழுதேன் நான்;
“அருவான் அவர்தாம் போனவுடன் அடியேன் போவேன்” எனச்சொன்னார்
“பெருவான் போகும் நலம் எண்ணிப் பின்பு சிரித்தேன்” என்றார்கள்;
திருமாண் புடையோர் இவர்பெருமை தெளிவாய்ச் சொலவே சொல்உளதோ?64

பேராசை ஒழிக்க வேண்டும்

வருந்தி வருந்திச் சேர்க்கின்ற வளங்கள் எல்லாம் கடைநாளில்
பொருந்தி நம்மோடு இருந்திடுமோ? புதையும் காட்டுள் நலம்தருமோ?
இருந்து துய்ப்போம் எனநினைக்கும் எண்ணம் தான்கை கூடிடுமோ?
திருந்தி வாழ வேண்டும்நம் தீராப் பேரா சைஒழித்தே! 65

இறைவன்முன் கூனிக் குறுகக் கூடாது

இறைவன் தன்னை நீங்கிநாம் இம்மண் மேலே வரும்போது
கறைஇல் லாமல் தான்வந்தோம் கடவுள் இடத்தில் போம்போதும்
மறைவாய் சொன்ன நெறிநின்று மகிழ்வாய் இருந்தோம் நம்பிக்கைக்
குறைவாய்ச் சென்று கடவுள்முன் கூனிக் குறுகி நிற்பதுவோ? 66

தங்கக்காசுகளை ஏழைகளுக்குக் கொடுத்து விடு

இவ்வா றெண்ணிப் பணி நபியார் இனிய ஆயி சாமணியைக்
கொவ்வை வாய்மென் தளிர்க் கொடியே! கொண்டாய் தங்கக் காசன்றோ?
அவ்வா றந்தக் காசுகளை ஆர்க்கும் கொடாமல் இருந்து விடில்
செவ்வான் இறைவன் தன்முன்னே சென்று நாண வேண்டி வரும்; 67