பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்495


பொற்காசைப் புனிதப்படுத்தினார்

பொல்லா அந்தப் பொற்காசைப் புனிதப் படுத்த வேண்டுமெனில்
நல்லார் ஏழை எளியோர்க்கே நல்க வேண்டும் எனக் கூறி
“வல்லான் இறைவன் சொன்னவழி வழங்கி விடுவாய்” எனச்சொன்னார்;
மெல்லி யலாரும் தம்கணவர் விருப்பம் தன்போல் உடன்செய்தார் . 68

மகிழ்வும் கவலையும் மாறிமாறி வந்தது

பகலும் இரவும் என மாறி மாறித் தோன்றும் பண்பே போல்
முகம்மதண்ணல் உடல்நிலையில் முறையே நலமும் நோயதுவும்
மிகவும் மாறி மாறி வர மேவி இருந்த நல்லோர்கள்
முகமும் மகிழ்வு கவலையினால் முறையே நிலையற் றிருந்ததுவே. 69

நபிகள் நாயகத்தின் இதயம்

“இறைவா! இறைவா!” எனும் உணர்வே இதயம் முழுதும் கலந்ததனால்
மறையே முழங்கி நலஞ்செய்த மணிவாய் “அல்லாஹ் அல்லாஹு
உறைவான் உயர்ந்த தோழனிடம்” உரைகள் இதுபோல் பலகூறி
நிறைவாய் இருந்தார் நெடுங்கோமான் நேரில் இருந்தார் செவிகொளவே! 70

தோழர்கள் தம் பணிமேற் சென்றனர்

தோழர் எல்லாம் அவரவர்கள் தொட்ட பணிகள் தொடர்ந்திடவே
வாழ வைத்த வள்ளலிடம் வைத்த நெஞ்சை நிலைநிறுத்தி
ஆழ அன்பு செய்த அபூ பக்கர் தமைப் போல் மிக்காரும்
சூழ இருப்பார் தம்மிடத்தில் சொல்லிவிட்டுப் பிரிந்தார்கள். 71

நபிகளார் பல் துலக்கினார்

ஆயி சாவின் உடன்பிறந்த அப்துற் றகுமான் நபிபெருமான்
நோயின் நிலைமை காணுகிற நோக்கம் கொண்டே அவண்வந்தார்;
சேயின் கையில் இருந்தஒரு சிறிய “மிசுவாக்” குச்சியினை
நேய முடனே பார்த்தநபி நிலையைக் கண்டார் பெருமாட்டி; 72

ஆயிசா மிசுவாக் குச்சி கொடுத்தார்

நாடிவந்தோன் கையில் உள நற்பற் குச்சி தனைவாங்கிக்
கோடிகோடி மக்களினக் கூட்டத் தார்க்கு நன்மை செய
நாடி வந்த பெருமானாம் நபியார் தம்பால் தந்தார்கள்
நாடி நரம்பில் உணர்வில்எலாம் நாயகனாரைக் கொண்டவரே! 73