பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்51


அப்துல்லா முத்தலிப்பு இயற்கை எய்தினார்

எட்டாண்டும் இருதிங்கள் நாள்கள் பத்தும்

இசைந்தமுகம் மதுவுக்கு வாய்த்த பின்னர்ப்

பட்டார்ந்த திருமேனி கொண்ட நல்லார்

பகையற்ற அப்துல்லா முத்தலிப்பின்

நட்டார்கள் போற்றுகிற திருநல் ஆவி

நடுக்குற்றுப் பிரிந்துவிட அண்ணல் கண்டு

சுட்டால்ஓர் புழுதுடித்தல் போல நெஞ்சம்

துடிதுடித்துப் பதைபதைத்து வாடி னாரே; 61

முத்தலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது

உற்றார்கள் அழுதிரங்க ஒட்டி வந்த

உறுநண்பர் மனம்கலங்கப் பெண்கள் கூட்டம்

நற்றவத்து மக்காவின் சான்றோர் மக்கள்

நலம்கூறிப் புலம்பலுற, ஒருங்கு கூடிக்

கற்றவர்கள் எல்லாரும் கலங்கி விம்மக்

கடன்தவறா அப்துல்லா முத்தலிப்பின்

அற்றஉயிர் மெய்யதனை அடக்கம்செய்ய

அருமறையின் நெறிப்படியே அனைத்தும் செய்தார். 62

அபூத்தாலிப்பு சேயை வளர்க்கும் பொறுப்பு ஏற்றார்

வளர்த்துவந்த அப்துல்லா முத்தலிப்பு

வானுலகம் புக்கதனால் வருந்தி நல்ல

உளத்துடனே வந்தஉயர் அபூத்தாலிப்போ

உரிமையுடன் அடக்கமதில் கலந்து கொண்டு

விளைத்துவரும் தீன்இசுலாம் பயிரே ஓங்க

விழைகின்ற அல்லாவின் விருப்பம்போல

முளைத்துவந்த சூரியன்போல் ஆங்கே அன்பு

முகம்மதுவைத் தம்முடனே அழைத்துச் சென்றார். 63