பக்கம் எண் :

52துரை-மாலிறையன்

4. வணிகம் புக்க படலம்

முகம்மதுவின் வருகையினால் வளம் சேர்ந்தது

அறிவும் செறிவும் உடையவராம் அபூத்தாலிப்பின் இல்லத்தில்
வறியோர் வாழ வந்தநபி வள்ளல் பெருமான் சேர்ந்தவுடன்
சிறிய எளிய வீடெல்லாம் சிறந்த மாளிகை ஆக
வறிய எளிய மக்களெலாம் வளத்தால் சிறந்து விளங்கினரே! 1

வணக்கம் செய்ய முற்பட்டார்

எல்லா வளமும் நாம்பெற்றே ஏற்றம் அடைந்தோம் இவைஎல்லாம்
அல்லா அருளால் வந்தவராம் அரிய நபியால் விளைந்தவென
நல்லார் அபூத்தா லிப்பவரும் நன்றாய் எண்ணித் தெளிந்தவுடன்
ஒல்லும் வகையால் வணிகத்தை உற்றுச் செய்ய முற்பட்டார்; 2

முகம்மதுவும் வணிகம் செய்ய விரும்பினார்

வணிகப் பொருள்கள் பலவற்றை வாங்கிச் சேர்த்தார் அபூத்தாலிப்பு
அணிசேர் குதிரை ஒட்டகங்கள் அனைத்தின் மேலும் சரக்கேற்றிப்
பணியும் அன்னார் மனைவிக்குப் பயணம் பற்றிச் சொல்லுகையில்
மணிவாய் அன்பர் முகம்மதுவும் வணிகம் செய்ய விரும்பினரே! 3

போகும்வழி கொடுமையானது ஆயிற்றே

“சாம்நன் னகரம் செலும்பாதை சரியில் லாத பாதைஅதில்
நாம்போம் போது நடுக்கமுற நாலு வகையாம் தீமைகளும்
தாம்நம் முன்னே தோன்றிவரும் தாங்க மாட்டாய் முகம்மதுவே
பாம்பும் கல்லும் முட்செடியும் பாதை எங்கும் தடைசெய்யும்; 4

விரும்புவதால் இனித்தடுக்க மாட்டேன்

குடிக்கத் தண்ணீர் கிடைக்காது; கோடை வெயிலோ குறையாது;
துடிக்கத் துடிக்கக் கொப்புளங்கள் தோன்றும்; காலும் வெடிப்பாகும்;
படித்துப் படித்துச் சொல்கின்றேன்; படர்ந்து வரவே நினைக்கின்றீர்;
தடுத்தால் இனியும் பயனில்லை தடையே இல்லை வருகென்றார்; 5