பாம்பு பேசியது
முகம்மது ஒருமலைத் தொடரை அடைந்தார்
தீங்கிழைக் காமல் செம்மலார் தங்கள்
திகழ்மலர்ப் பாதமே வணங்கி
வேங்கையும் வேறு வெங்கொடுங் காட்டில்
விரைந்தது கண்டதன் பின்னர்ப்
பூங்கவின் மேனி புதுமண நபியார்
புகழ்ந்துடன் வணிகர்கள் சூழ
நீங்கியோர் சாலை நெடுவழி தொடர்ந்து
நெருங்கிஓர் மலைத்தொடர் கடந்தார். 66
ஐயனே! கொடிய பாம்பு உள்ளது
கவின்மலை ஆறு கானகம் கடந்தோர்
கல்லொடு முள்புணர் வழியில்
நவில்புகழ் உரைகள் நலம்பெறக் கூறி
நடந்துசெல் பொழுதினில் ஆங்கோர்
குவிந்தகை மாந்தன்குனிந்துடன் வணங்கிக்
“கொண்டலே! நாம்செலும் இந்த
அவிழ்மலர்க் காட்டில் ஆரையும் கலக்கும்
அருங்கொடும் பாம்புள” தென்றான். 67
அதன் மூச்சுவெப்பமே கருக்கிவிடும்
“பாம்பெனும் பெயரில் பார்க்கவே வரினும்
பாம்பென நாம்சொல மாட்டோம்
ஆம்புவித் தீமை அத்தனைப் பண்பும்
அவ்வுருக் கொண்டதே என்போம்
கூம்புபோல் தலையும் கூரிய நாவும்
கொடுங்கயி றெனப்படர் வாலும்
வேம்படி விடுக்கும் வெவ்விய மூச்சும்
வியன்புவி யாவையும் கருக்கும்” 68
|