நல்லற மாகிய இல்லறத் தவசி பக்தருக் கெல்லாம் பக்த சிகாமணி ஐம்புலன் வென்ற அருந்தவ சித்தன். ஞாலத் துக்கொரு ஞான ஜோதியாய் அறந்தரு வாழ்க்கை அந்த ணாளனாம். 75 காந்தி அடிகள்எம் கருணா மூர்த்தி - சத்தியம் சாந்தமே கத்திகே டயமாய்க் கொல்லா விரதமே வில்லாய் வளைத்திட்(டு) அன்பே அதற்கோர் அம்பாய்ப் பூட்டி அறப்போர் தொடுத்தஅவ் வாரம்ப நாளில், 80 அன்னவன், சேனையில் ஒருவனாய் யானும் சேர்ந்தேன் காந்தி மகானின் கருத்தைச் சொல்லிப் பாமர மக்களின் படைப்பலம் திரட்ட ஒவ்வோர் ஊராய் ஓடித் திரிந்து 85 வீடு வாசல் வேலைகள் விட்டு அதுவே பணியாய் அலைந்த நாட்களில் - "அயலூர் ஒன்றில் அரசியற் கூட்டம். பெருத்த கூட்டம் பெரியகொண் டாட்டம்; பட்டண மிருந்தொரு பண்டிதர் வருகிறார்; 90 செந்தமிழ் நடையில் தித்திக்கப் பேசுவார்; போவோம் அதற்குப் புறப்படுங்கள்" என, என்னையும் சிலரையும் எனக்கொரு நண்பர் கந்த சாமியார் கனிவுடன் அழைத்தார். இதனைக் கேட்டார் இன்னொரு நண்பர்; 95 "பண்டிதர் பேச்சா? பழைய சோறுதான். சளசள சளவென்று சப்பிட் டிருக்கும். வெண்டைக் காயும் விளக்கெண் ணெயுமாய் வழவழ வென்றுதான் பேச்சு வளரும். நேற்றொரு பண்டிதர் நீளமாய்ப் பேசினார். 100 |