புலவர் சிவ. கன்னியப்பன் 155

101. இறவாமல் இருக்க

பல்லவி

இறவாமல் என்றென்றும் காந்தி இருக்க வேண்டின்
மறவாமல் அவர்தந்த மார்க்கம் நடக்கவேண்டும்.

அநுபல்லவி

பிறவாப் பெரும்பிறவி பிரிந்தாரே காந்தியென்று
பறவாய்ப் பறந்ததெல்லாம் பாசாங்கு அல்லவென்றால்       (இற)

சரணங்கள்

எல்லா மதங்களுக்கும் இறைவன் ஒருவனேதான்
எந்தெந்த ஜாதியாரும் வந்திருக்கும் ஜோதிஅது
அல்லாவும் ஈசுவரனும் அனைத்தும் அவனேஎன
அனுதினம் பிரர்த்தித்தே அறிவிக்கும் காந்தி அண்ணல்       (இற)1

இன்பமும் துன்பமும் எல்லார்க்கும் ஒன்றேதான்
இம்சை பிறர்க்குமட்டும் என்றேனும் நன்றாமோ?
அன்புசெய் வாழ்க்கைதான் அறிவாகும் தமக்கென்
அணுவேனும் பொய்யன்றி அனுஷ்டிக்கும் காந்தி ஐயன்       (இற)2

உழைப்பின்றிச் சுகிப்பதும் சுகமின்றி உழைப்பதும்
உலகத்தில் என்றென்றும் கலகத்தை விளைவிப்பது.
இளப்பமாய் நினைக்காமல் எல்லாரும் உழைத்திடில்
இம்சை குறைக்கவந்த காந்தீயம் செழித்திடும்.       (இற)3

குறிப்புரை:- அனுதினம் - நாள்தோறும்; ஐயன் - தலைவன்;
இம்சை - துன்பம்.

102. மகிமை மனிதன்

பல்லவி

புனிதன் காந்தியை நினைக்கும் பொழுதே
புலன்களுக் கெட்டாப் புதுமைகள் தோன்றும்.