நன்றிமறந்தவன் சண்டாளன்; நயமுரை வஞ்சகன் சண்டாளன்; கொன்று சுகித்தவன் சண்டாளன்; கோப மிகுந்தவன் சண்டாளன்; கன்று நலிந்திடப் பாலெல்லாம் கறந்து புசித்தவன் சண்டாளன்; ஒன்றும் தெரியேன் "ஏழை" எனும் ஒன்றே என்குறை; அதற்காக (நானோ)3 கள்ளைக் குடிப்பவன் சண்டாளன்; காமத் தலைவன் சண்டாளன்; கொள்ளை அடிப்பவன் சண்டாளன்; கூடிக் கெடுப்பவன் சண்டாளன்; ‘அள்ளித் தெறிக்கா‘ப் பணக்காரன் ஆபத் துதவான் சண்டாளன் வெள்ளைத் துணியொன் றில்லாமல் வேலைசெய்வேன்; அதற்காக (நானோ)4 தெய்வமிகழ்ந்தவன் சண்டாளன்; தீனரைக் கெடுத்தவன் சண்டாளன்; பொய்யுரை பேசிப் பிறர்கேடே புரிந்து பிழைப்பவன் சண்டாளன்; ‘ஐயா அடைக்கலம்‘ என்றோரை ஆதரிக் காதவன் சண்டாளன்; வெய்யில் மழையென் றில்லாமல் வேண்டிய செய்வேன்; அதற்காக (நானோ)5 ஆலயத் துள்ளே அபசாரம் அறிந்தே புரிந்தவன் சண்டாளன்; கூலியை மறைத்தவன் சண்டாளன்; கோள்சொலிப் பிழைப்பவன் சண்டாளன்; வேலியைக் கடந்தே பிறன்பயிரை வேண்டுமென் றழித்தவன் சண்டாளன்; காலையும் மாலையும் இல்லாமல் கஷ்டப் படுவேன் கள்ளமிலேன். (நானோ)6 |