புலவர் சிவ. கன்னியப்பன் 209

பஞ்ச மென்ற ஏக்கமும்
       பகைமை யென்ற கொச்சையும்
நஞ்சை யொத்த கோபமும்
       நாச மூட்டும் இச்சையும்
கெஞ்சி நின்று சோறுதின்னும்
       கீழ்மை யான எண்ணமும்
அஞ்சி அஞ்சி அன்பினுக்கே
       அடிமை வேலை பண்ணுமே.       6

முக்தி என்ற ஆசையும்
       மோட்ச மென்று பேசலும்
பக்தி என்ற பாசமும்
       பரமன் என்ற நேசமும்
சத்தி யத்தின் மேன்மையும்
       சாந்தி என்ற வெற்றியும்
அத்த னைக்கும் மூலமாம்
       அன்பு என்ற ஒன்றுதான்.       7

போழ்ந்து நம்மை நீக்கிவைக்கும்
       பேத புத்தி போகவும்
சூழ்ந்து நின்று மதிகெடுக்கும்
       சூது பொய்கள் ஏகவும்
ஆழ்ந்த கல்வி யின்றிக்கூட
       அன்பு என்ற ஒன்றினால்
வாழ்ந்தி ருக்க லாகும் அன்பு
       வளர்க வாழ்க என்றுமே.       8

நேய மற்ற மதவெறிக்கு
       நிலைய மான நேசமாம்
பேயுங் கூட நடுநடுங்கிப்
       பேத வித்துக் கூசுமாம்
நாய்ந ரிக்கும் அச்சமூட்டும்
       நவக ளிக்குள் காந்தியார்
போய்ந டந்த யாத்தி ரைக்குள்
       புனித அன்பு சேர்ந்ததாம்.       9