10. கண்ணன் திருவருள் கண்ணன் வருகிற இந்நாளே களிப்புகள் தருகிற நன்னாளாம். திண்ணம் அவனருள் உண்டானால் தீங்கெதும் நம்மை அண்டாது. 1 அசுரத் தனங்களை இகழ்ந்திடவும் அன்புக் குணங்களைப் புகழ்ந்திடவும் விசனம் என்பதை ஒழித்திடவும் வித்தகக் கண்ணன் வழித்துணையாம். 2 அரசரின் குலத்தில் பிறந்தாலும் ஆயர்தம் குடிசையில் வளர்ந்தவனாம் ஒருசிறு பேதமும் எண்ணாமல் ஒற்றுமை காட்டும் கண்ணாளன். 3 எங்கும் எதிலும் வேடிக்கை இழைப்பது கண்ணன் வாடிக்கை இங்கும் நாம்அதைக் கடைப்பிடித்தால் இன்பம் வாழ்க்கையில் தடைப்படுமா? 4
அடுக்குப் பானையை உருட்டிடுவான்; அதட்டப் போனால் சிரித்திடுவான். துடுக்குக் கண்ணனைக் கண்டவுடன் தோன்றிய கோபம் சுண்டிவிடும். 5 ஒன்றும் தெரியாப் பாலன்போல் உலகை நடத்தும் லோலன்காண் என்றும் இளமை குறையாமல் எல்லாப் பொருளிலும் உறைவான்காண். 6 நம்பின மெய்யரைத் தாங்கிடுவான்; நடிக்கும் பொய்யரை நீங்கிடுவான். வம்புகள் செய்தால் செல்லாவாம்; வாதுகள் அவனிடம் வெல்லாவாம். 7 |