புலவர் சிவ. கன்னியப்பன் 25

12. அன்பனந்த முருகன்

முருகனென்ற சிறுவன்வந்து
       முணுமுணுத்த சொல்லினான்
முன்னிருந்த எண்ணம் யாவும்
       பின்னமுற்றுப் போனதே!
அருகுவந்து மனமுவந்தே
       அவனுரைத்த ஒன்றினால்
அடிமையென் மனத்திருந்த
       அச்சமற்றுப் போனதே!       1

இளமையந்த முருகன்வந்து
       என்னோடொன்று சொல்லவே
என்னுளத்தி ருந்தபந்தம்
       ஏதுமற்றுப் போனதே!
வளமையுற்ற இளமைபெற்று
       வலிமிகுந்த தென்னவே
வந்ததே சுதந்திரத்தில்
       வாஞ்சை யென்ற ஞானமே!       2

அழகனந்த முருகன்வந்தென்
       அருகிருந்த போதிலே
ஐம்புலன்க ளுக்கொடுங்கி
       அஞ்சியஞ்சி அஞ்சிநான்
பழமையென் உடற்கண்வைத்த
       பற்றுயாவும் அற்றதால்
பாரிலென்னை யாருங்கண்டு
       பணியுமாறு செய்ததே!       3

அன்பனந்த முருகன்வந்
       தழைத்திருத்தி என்னையே
அஞ்சல்அஞ்சல் அஞ்சலென்
       றகங்குழைந்து சொன்னதால்
துன்பமிக்க அடிமை வாழ்வில்
       தோய்ந்திருந்த என்மனம்
சோகம் விட்டு விடுதலைக்கு
       மோகமுற்று விட்டதே!       4