12. அன்பனந்த முருகன் முருகனென்ற சிறுவன்வந்து முணுமுணுத்த சொல்லினான் முன்னிருந்த எண்ணம் யாவும் பின்னமுற்றுப் போனதே! அருகுவந்து மனமுவந்தே அவனுரைத்த ஒன்றினால் அடிமையென் மனத்திருந்த அச்சமற்றுப் போனதே! 1 இளமையந்த முருகன்வந்து என்னோடொன்று சொல்லவே என்னுளத்தி ருந்தபந்தம் ஏதுமற்றுப் போனதே! வளமையுற்ற இளமைபெற்று வலிமிகுந்த தென்னவே வந்ததே சுதந்திரத்தில் வாஞ்சை யென்ற ஞானமே! 2 அழகனந்த முருகன்வந்தென் அருகிருந்த போதிலே ஐம்புலன்க ளுக்கொடுங்கி அஞ்சியஞ்சி அஞ்சிநான் பழமையென் உடற்கண்வைத்த பற்றுயாவும் அற்றதால் பாரிலென்னை யாருங்கண்டு பணியுமாறு செய்ததே! 3 அன்பனந்த முருகன்வந் தழைத்திருத்தி என்னையே அஞ்சல்அஞ்சல் அஞ்சலென் றகங்குழைந்து சொன்னதால் துன்பமிக்க அடிமை வாழ்வில் தோய்ந்திருந்த என்மனம் சோகம் விட்டு விடுதலைக்கு மோகமுற்று விட்டதே! 4
|