தங்குதற்கிங் கிடம்கேட்ட ஆங்கி லர்க்குத் தயவாகச் சென்னையிலே இடந்தந் தார்கள் அங்கிருந்து மெள்ளமெள்ள இந்த நாட்டின் ஆட்சிதனை அபகரித்தார் சூழ்ச்சி யாலே. 2 சமயமுற்ற போதெல்லாம் சதிகள் செய்தார்; இந்நாட்டு மன்னரிடை சண்டை மூட்டித் தமையடுத்த அரசருக்கும் உதவி போலத் தந்திரமாய் அவர்களைத்தம் அடிமை யாக்கி இமயமுதல் குமரிமுனை இறுதி யாக இப்பெரிய திருநாட்டைப் பற்றிக் கொண்டார். சுமைசுமையாய் இங்கிருந்த செல்வம் தன்னைச் சூரைகொண்டு சீமைக்குத் தூக்கிச் சென்றார். 3 நாகரிக அரசாட்சி நடத்தி இங்கே நன்மைசெய்ய வந்தவர்போல் தோன்றினாலும் போகமிகும் பதவியெல்லாம் வெள்ளை யர்க்கே; புழுக்கைகளின் வேலைகளே இந்தியர்க்காம்; சோகமுற்று இதைக்கண்ட சுதேச மக்கள் சுதந்தரத்தின் சிறப்புணரத் தொடங்கி னார்கள்; வேகமுடன் எண்ணிமனம் வெந்து நொந்து வீறுகொண்டு விடுதலைக்கே துணிந்திட் டார்கள்.4 ‘இந்துமதக் கொள்கைகளில் தலையிட்டார்கள்; இஸ்லாம்கள் மதத்தினையும் இகழ்ந்திட் டார்கள்; சொந்தமதம் கிறிஸ்தவத்தைப் பரப்பு தற்கே சூழ்ச்சியுடன் ஆட்சிசெய்யத் தொடங்கியுள்ளார்; இந்தவிதம் மதத்தினைநாம் இழக்க லாமா?‘ என்றுபல காரணங்கள் இணைத்துக் கூறிப் பந்தமற வெள்ளையரை வெறுக்கும் பேச்சே பட்டாளத் தார்களிடைப் பரப்பி னார்கள். 5 குறிப்புரை:- வீறு - வேகம், வெற்றி. |