புலவர் சிவ. கன்னியப்பன் 281

எப்படியோ வெள்ளையர்கள் எதிர்த்து நின்றார்
       இந்தியரின் துணைகொண்டே இதனை வென்றார்.
அப்படியாய் எழுச்சிகளை அடக்கும் போதும்
       ஆங்கிலர்கள் செய்திட்ட அநியா யங்கள்
எப்பொழுதும் அவரினத்தை நாணச் செய்யும்;
       எங்கெங்கும் நாகரிகம் ஏசிக் கூசும்;
தப்பறியாப் பெண்களையும் தூக்கி லிட்டார்
       தாயோடு சிசுக்களையும் தகித்துக் கொன்றார்.       13

குடுகுடுத்த கிழவரையும் குத்திக் கொன்றார்;
       குற்றமற்ற பேர்களையும் சுட்டுத் தள்ளிப்
பிடிகிடைத்த வீரர்களைப் பிணைத்துக் கட்டிப்
       பீரங்கி வாயில்வைத்துப் பிளந்திட் டார்கள்;
கடுகடுத்திங் கிதற்கீடாய்க் கான்பூர் தன்னில்
       காப்பளிக்கப் பட்டவெள்ளைக் காரப் பெண்கள்
நடுநடுங்கச் சிசுக்களுடன் நசுக்கப் பட்டார்
       நாணாவின் ஆட்களினால் நாணம் எஞ்ச       14

அதன்பிறகும் ஆங்கிலர்கள் வெறிகொண் டார்கள்;
       அரக்கரினும் கொடுமைகளை அதிகம் செய்தார்;
மதங்கொண்ட யானையைப்போல் சுற்றிச் சுற்றி
       மக்கள்தமைக் கண்டபடி வதைத்திட் டார்கள்;
அதம்செய்தும் ஊர்களுக்கு அளவிட் டார்கள்.
       அபயமென்ற பேர்களையும் அழித்திட் டார்கள்;
இதம்கண்டார் துரைத்தனத்தார் இங்கி லாந்தில்
       எப்படிச்செய் தாலும்சரி என்றிட் டார்கள்.       15

வித்தகி அப்பெண்ணரசி

வீரருக்குள் வீரர்களும் வியந்து போற்றும்
       வித்தகிஅப் பெண்ணரசி ஜான்சி ராணி
போரகத்துக் குதிரையின்மேல் போகும் போது
       புல்லியர்தம் குண்டுபட்டு மாண்டு போனாள்;