338நாமக்கல் கவிஞர் பாடல்கள்

‘வாரவர் போறவர்‘ யாரையும் நம்பி
       வாடின காலங்கள் ஓடின தம்பி!
வீரமும் தீரமும் வெற்றுரை யாமோ?
       விடுதலை வேண்டுதல் விட்டிடப் போமோ?       4

முத்தமிழ் நாடுஎன்றன் முன்னையர் நாடு;
       முற்றிலும் சொந்தம் எனக்கெனப் பாடு;
சற்றும் உரிமையில் லாதவர் ஆளச்
       சரிசரி யென்றது போனது மாள;
பக்தியின் அன்பினில் பணிபல செய்வோம்;
       பயப்பட்டு யாருக்கும் பணிந்திடல் செய்யோம்;
சத்தியம் சாந்தத்தில் முற்றிலும் நின்றே
       சடுதியில் விடுதலை அடைவது நன்றே.       5

212. வாழ்க நம் நாடு

நம்நாடு செழிக்க வேண்டும்
       நாமெலாம் களிக்க வேண்டும்
நம்நாடு மட்டும் வாழப்
       பிறர்நாட்டைத் தவிக்கச் செய்யும்
வெம்நாடு களுக்கே வரமோர்
       விழுமிய ஞான மார்க்கம்
எம்நாடு தந்தது என்றே
       இந்தியன் மகிழ வேண்டும்.       1

கண்டவர் மகிழ வேண்டும்
       கேட்டவர் புகழ வேண்டும்
கொண்டவர் குலவ வேண்டும்
       குறைந்தவர் நிறைந்து மெச்ச
அண்டின எவரும் அச்சம்
       அடிமையை அகற்று மாறு
தண்டமிழ் அலைகள் வீசி
       நம்நாடு தழைக்க வேண்டும்.       2