34நாமக்கல் கவிஞர் பாடல்கள்

அன்பென்று அதைமிக்க அறிவிக்க நின்று
துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே
இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்;
தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம்.       3

அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம்
பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்;
இருள்கொண்ட உள்ளத்தில் இயல்பான பழியைத்
தெருள்கொள்ள ஒளிதந்து திகழ்கின்ற மொழியே.       4

அறிவென்று பெயர்கொண்ட அதைமட்டும் நாடும்;
குறிகொண்டே உலகெங்கும் குறைவின்றித் தேடும்;
வெறிகொண்ட இனம்என்று வெகுபேர்கள் போற்றும்
நெறிகொண்ட தமிழ்மக்கள் நிறைகண்ட மாற்றம்.       5

கலையென்ற கடலுக்குக் கரைகண்ட புணையாம்
நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்;
அலைபட்ட மனதிற்கு அமைதிக்கு வழியாம்;
மலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம்.       6

அறமன்றிச் செயலொன்றும் அறியாத மொழியாம்;
மறமென்ற செயல்என்றும் மதியாத மொழியாம்;
நிறமென்று மதமென்று நிந்தித்தல் அறியாத்
திறமுள்ள தமிழென்று திசைமெச்சும் நெறியாம்.       7

குணமென்ற அதைமட்டும் கும்பிட்டு நாளும்
பணமென்ற பலமென்ற பயமின்றி வாழும்
இணையற்ற உறுதிக்கு இசைமிக்க வழியாம்
மணமிக்க தமிழென்று மதிமிக்க மொழியாம்.       8

பலகாலம் பலநாடும் பரிவோடு சுற்றி
உலகோரின் பலசொல்லை உறவோடு கற்று
விலகாத நட்பிற்கு வெகு கெட்டி வேராம்;
தலையாய அறிவிற்குத் தமிழென்று பேராம்.       9