புலவர் சிவ. கன்னியப்பன் 353

217. சுதந்தரத் தேவி

சுதந்தரத் தேவியைத் தொழுவோம் வாரீர்
சுகம்பெற அதுதான் வழியாம் பாரீர்
பதந்தரும் மானிடப் பண்புகள் வளரும்
பரமனை உணர்ந்திடப் பக்தியும் கிளரும்.       1

விடுதலை அடைந்தது சுதந்தரம் இல்லை
வெற்றிகள் என்பதும் வெறிதரும் தொல்லை
கெடுதலை நீக்கிடக் கிருபைகள் செய்யும்
கேண்மையின் வடிவே சுதந்தரத் தெய்வம்.       2

அன்னிய உதவியை அவசியம் நீக்கும்;
அதுதான் சுதந்தர ஆற்றலைக் காக்கும்;
பொன்னிலும் உயர்ந்தது சுதந்தரச் சிறப்பு;
பொறுமையும் வாய்மையும் அதற்குள் பொறுப்பு.3

ஆயுத வெறிகளை அப்புறம் ஒதுக்கி,
அன்பின் நெறிகளில் அரசியல் புதுக்கி,
சாய்கிற வரையிலும் சமரசம் பரப்பி,
சண்டைகள் விலக்குதல் சுதந்தரப் பொறுப்பு.       4

அற்புதன் காந்தியின் அறநெறி கொண்டோம்;
அடிமை விலங்குகள் அகன்றன கண்டோம்;
கற்பெனக் காந்தியின் நன்னெறி காப்போம்.
கருணையும் ஆற்றலும் கலந்திட நோற்போம்.       5

குறிப்புரை:- பரமன் - மேலானவனான இறைவன்; அறநெறி -
தருமவழி; கருணை -அருள்; ஆற்றல் - சக்தி; சமரசம் -
இருவரையும் ஒப்புநோக்கிச் சமம் செய்தல்.

12 நா.க.பா. பூ.வெ. எ. 489