384நாமக்கல் கவிஞர் பாடல்கள்

அற்புதப்பிறவி காந்தி
       அற்புத மரணம் உற்றார்;
கற்பனை கடந்த சாந்தன்
       கடவுளிற் கலந்து கொண்டார்;
பற்பல நினைந்து பேசிப்
       புலம்புதல் பயித்தி யந்தான்!
நற்குணச் சீலன் காந்தி
       சொற்படி நடப்போம் வாரீர்.       2

உடலொடுவந்து போகும்
       உருவினில் தெரிவது அன்றிக்
கடவுளை உலகில் யாரும்
       நேருறக் காண்பது இல்லை;
அடைவரும் கருணை அந்தக்
       கடவுளின் அன்பு தன்னை
நடைமுறை வாழ்விற் செய்த
       காந்தியே நமது தெய்வம்!       3

எத்தவம் முயலு வோர்க்கும்
       இருந்திட வேண்டும் என்னும்
சத்தியத் தூய வாழ்வின்
       சற்குணப் பாறை போன்று
நித்தமும் நமக்கு முன்னால்
       நின்றுகொண்டு அறிவு சொல்லும்
உத்தமன் காந்தி எம்மான்
       உடலுக்கா உளைந்து போவோம்?       4

நோன்புடன்மறைந்த காந்தி
       நுண்ணிய உடலின் சாரம்
சாம்பலில் கரைந்து இன்று
       நதிகளில் கலந்து சத்தமாய்த்
தேம்பிடும் உலகம் தேறத்
       திரைகடல் மூலம் சென்று
ஏம்பலைப் போக்கி ஞான
       எழுச்சியைக் கொடுக்கும் எங்கும்.       5