புலவர் சிவ. கன்னியப்பன் 439

போனவிடம்எங்கெங்கும் புதுமை கொள்ளும்
       புகுந்தமனை ஒவ்வொன்றும் பூரிப்பாகும்
கானகமும் கடிமனைபோல் களிப்புச் செய்யும்
       கல்லணையும் மெல்லணையாய்க் கனிவுகாட்டும்
ஈனர்களும் தரிசனத்தால் எழுச்சி கொள்வார்
       இமையவரும் அதிசயித்தே இமைத்து நிற்பார்
தீனர்எல்லாம் பயம்ஒழிவார் தீரன் காந்தி
       திருக்கதையே தெருக்கள்எலாம் திகழவேண்டும்.       16

பாடம்எல்லாம்காந்திமயம் படிக்க வேண்டும்
       பள்ளியெல்லாம் காந்திவழி பழக வேண்டும்
நாடகங்கள் காந்திகதை நடிக்க வேண்டும்
       நாட்டியத்தில் காந்திஅபி நயங்கள்வேண்டும்
மாடம்எல்லாம் காந்திசிலை மலிய வேண்டும்
       மனைகள்எல்லாம் காந்திபுகழ் மகிழவேண்டும்
கூடும்எல்லா வழிகளிலும் காந்தி அன்புக்
       கொள்கைகளே போதனையாய்க்கொடுக்க வேண்டும்.       17

கல்வியெல்லாம்காந்திமணம் கமழவேண்டும்
       கலைகள்எல்லாம் காந்திகுணம் காட்டவேண்டும்
சொல்வதுஎல்லாம் காந்திஅறம் சொல்ல வேண்டும்
       சூத்திரமாய்க் காந்தியுரை துலங்க வேண்டும்
வெல்வதுஎல்லாம் காந்திவழி விழைய வேண்டும்
       வேள்வியென்றே அவர்திருநாள்விளங்க வேண்டும்.
நல்வழிகள் யாவினுக்கும் நடுவாய் நின்ற
       நாயகனாம் காந்திசொன்ன நடத்தை வேண்டும்.       18

குண்டுபட்டும்திடுக்கடைந்து குலுங்கிடாமல்
       கொள்கைதரும் ராமஜெபம் ஒன்றே கூறிக்
கொண்டமனச் சாந்திநிலை குறைந்தி டாமல்
       கோணலுற்ற வாய்வெறித்துக் குளவி டாமல்
அண்டைஅயல் துணைதேடி அலண்டி டாமல்
       அமைதியுடன் பரமபதம் அடைந்தார் காந்தி
கண்டதுண்டோ கேட்டதுண்டோ கதைதான் உண்டோ
       கற்பனையாய் இப்படிஓர் கவிதான் உண்டோ?       19