24. எம்மதமாயினும் சம்மதம் கோபமும் கொதிப்பும் குமுறிடும் படிபல கொடுமைகள் நடக்குது வடநாட்டில் தாபமும் தவிப்பும் தந்திடும் ஆயினும் தமிழா! உன்குணம் தவறிடுமோ? 1 அன்னிய மதமென அடிக்கடி பழகிய அயலுள மக்களைக் கொல்லுவதை என்னென உரைப்பது ஏதென வெறுப்பது எண்ணவுங் கூடத் தகுமோதான்? 2 வேறொரு மதமென அண்டையில் வசிப்பவர் வீட்டினைக் கொளுத்துதல் வீரமதோ? ஆறறி வுடையவர் மனிதர்கள் என்றிடும் அழகிது தானோ? ஐயையோ! 3 பிறிதொரு மதமெனப் பெண்மையைக் கெடுப்பதும் பிள்ளையை மடிப்பதும் பேய்செய்யுமோ? வெறிதரும் நெறிகளை விலக்கிய உன்குணம் விட்டிடப் படுமோ? தமிழ் மகனே! 4 அங்குள வெறியர்கள் அப்படிச் செய்ததில் அவசரப் படுத்திடும் ஆத்திரத்தால் இங்குள சிலர்எதிர் செய்ய நினைப்பதை எப்படித் தமிழ்மனம் ஒப்பிடுமோ? 5 தீமையைத் தீமையால் தீர்க்க நினைப்பது தீயினைத் தீயால் அவிப்பதுபோல் வாய்மையின் தூய்மையின் வழிவரும் தமிழா! வஞ்சம் தீர்ப்பதை வரிப்பாயோ? 6 அடைக்கலம் புகுந்தன அன்னிய மதம்பல அன்புள்ள நம்தமிழ்த் திருநாட்டில் கொடைக்குணம் மிகுந்தநம் குலத்தவர் காத்தனர் கொள்கையை நாம்விடக் கூடாது. 7 |