285. தென்றல் தென்றல் குலவிவரும் - நல்ல தென்மொழி தேனைத் தரும் நன்றுள சேதிகளே - சொல்ல நம்மிடைத் தூதுவரும். 1 உள்ளம் கிளர்ச்சிபெறும் - படி உடலம் குளிர்ச்சியுறும் கள்ளமனக் குறும்பும் - சற்றுக் கவலையறத் திரும்பும். 2 காதலைக் கொண்டுவரும் - இன்பக் கதைளை மொண்டுதரும் நோதலைப் போக்கிவிடும் - நம்மை நூதனம் ஆக்கிவிடும். 3 வேகங்கள் மாறிவிடும் - ஏதும் வெஞ்சினம் ஆறிவிடும் தாகம் தணிந்ததுபோல் - உள்ளம் தண்மை அணிந்திடுமே. 4 நற்குணம் பேசிவரும் - ஞான நறுமணம் வீசிவரும் பற்பல நாட்டவரின் - உயர் பண்புகள் கூட்டிவரும். 5 பகைமை மறந்திடவும் - அன்பின் பற்று நிறைந்திடவும் தகைமை மிகுந்ததுவாம் - தென்றல் தன்னை உகந்திடுவோம். 6 கவிதை நிறைந்துளதாய் - ஆழக் கல்வி சிறந்ததுவாய்ச் செவியில் முணுமுணுக்கும் - அதில் செம்மை கிணுகிணுக்கும். 7 |