290. காந்தி வழி பழசா? சாந்தவழி சத்தியத்தில் சலித்தாய் நெஞ்சே! சன்மார்க்கப் பழக்கம் இல்லாச் சகவா சத்தால் காந்திவழி பழசாகப் போன தென்று கதிமாற மதிமாறிக் கருது கின்றாய்; மாந்தருக்குள் காந்தியைப்போல் புதுமைவாழ்க்கை மற்றுஒருவர் நடத்தினரா? மனமே! சொல்வாய்; ஆய்ந்தறிந்த அவன்தொடர்பை இகழ்வாய் ஆனால் யாரும்இனி மீட்கவொண்ணா அடிமை யேநீ. 1 ‘பெற்றெடுத்த தாய்மிகவும் பழசாய்ப்போனாள் பிறிதொருதாய் வேண்டும்‘ என்றுபேசுவார்போல் நற்றவத்தால் நமக்குஅடுத்த தலைவன் காந்தி நானிலத்தில் உயிர்க்கெல்லாம் தாயாம் நண்பன் கற்றதை சரித்திரங்கள் காணாச் சுத்தன் கருணையென்ப(து) இன்னதுஎனக் காட்டும் தீரன் உற்றதுணை காந்திவழி பழசாம் என்றால் உய்வதற்கு வேறுகதி உண்டோ நெஞ்சே! 2 சந்திரனும் சூரியனும் பழசாய்ப் போனார்; சலித்துவிட்டோம் தினந்தினமும் அவரைப்பார்த்து; விந்தையுள்ள வேறிருவர் வேண்டும் என்று விரும்புவதை ஒக்கும் அன்றோ விளம்பாய் நெஞ்சே! இந்நிலம் இதுவரையில் அறிந்த உண்மை இதைவிடமேல் இல்லையென நடந்து காட்டிச் சந்ததமும் மாறாத அறத்தைக் காக்கும் சாந்தன்அந்தக் காந்தியைநீ சலித்த தன்மை! 3 ‘நித்தம் ஒரு காற்றினையே மூச்சு வாங்கி நீர்நெருப்பு நிலம்வானில் புதிசும் இன்றி மெத்தவும்நாம் சலித்துவிட்டோம்‘ என்பாய்ஆனால் மேதினியில் வேறுவழி உண்டோ நெஞ்சே! |