புலவர் சிவ. கன்னியப்பன் 49

எத்தாலும் பணம்தேடி இன்பம் நாடி
       உண்டுடுத்தே இறப்பதனை இகழ்ந்து தள்ளிப்
பித்தாகித் தான் பிறந்த பரத நாட்டின்
       பிணிவீட்டில் ஒன்றினுக்கே பாடிப் பாடி
முத்தாதி மணிகளேனும் சொற்க ளோடு
       முப்பழத்தில் சுவைகூட்டி முனிவி லாது
சத்தான வீரத்தின் சாறும் சேர்த்துக்
       கவிசமைத்த பாரதியின் தகைமை என்னே!       4

கடித்தொழுகித் துதிபாடி நலங்கள் நாடி
       நரைத்திறந்து மறைந்திடும்நா வலர்போ லன்றி
வெடித்தெழுந்த பக்தியோடு பரத நாட்டின்
       விடுதலைக்குப் பாடுவதே வெறியாய்க் கொண்டான்
இடித்தெழுந்து தேன்பொழியும் சொற்க ளோடும்
       இளங்கதிரும் முழுமதியும் இணைந்தா லென்னப்
பொடித்துடலம் புளகமுற அச்சம் போக்கிப்
       புகழ்புரியும் பாரதியின் புலமை தானே.       5

‘மேனாட்டுப் புதுமொழிகள் வளர்ந்து நாளும்
       மிகக்கொழுத்துப் பளபளத்து மேன்மை மேவ
மிக்கதைப் பழந்தமிழ்த்தாய் மெலிந்தா‘ளென்றும்
       தாய்நாட்டைத் தமிழ்மொழியை மறந்தீர் ஐயோ!
தமிழர்களே! தளதளத்து மூச்சு வாங்கித்
       தலைவணங்கி உடல்சுகித்தீர் தவத்தால் மிக்க
வானாட்டுத் தேவர்களும் அறிந்தி டாத
       வளமிகுத்துச் செழு செழுத்து வாழ்ந்த நாட்டை
வறுமைதரும் அடிமையினில் வைத்த ரென்று
       பாநாட்டிப் பலவழியிற் பாடிப் பாடிப்
படித்தவுடன் பதைபதைக்க வீரமூட்டும்
       பாரதியின் பாடல்களின் பண்தான் என்னே!       6

"பாலொழுகும் சிறுகுதலை மகனைப் பார்த்துப்
       ‘படையெடுத்தார் பகையாளர்; மகனே! நீபோய்
வேலொழுகும் போர்க்களத்தில் வெல்வா யன்றேல்
       வெம்படையை மருமத்தில் வாங்கென்‘றேவும்