புலவர் சிவ. கன்னியப்பன் 51

நாற்றிசைத் தமிழ ரெங்கும்
       நாட்டினைப் பணியச் செய்த
நாவலர் சுப்ர மண்ய
       பாரதி நாமம் வாழ்க!       10

குறிப்புரை:- குற்றேவல் - அடித்தொண்டு; கோன் - அரசன்;
திறல் - வெற்றி; சவம் -பிணம்; தூர்த்தரை - கொடியோரை,
வஞ்சகரை.

27. தமிழ் எனத் துலங்க வைப்போம்

தமிழன்னை திருப்பணி செய்வோமே
தரணிக்கே ஓரணி செய்வோமே
அமிழ்தம் தமிழ்மொழி என்றாரே!
அப்பெயர் குறைவது நன்றாமோ?       1

அன்பு நிறைந்தவள் தமிழன்னை
அருளை அறிந்தவள் தமிழன்னை
இன்பக் கலைகள் யாவையுமே
ஈன்று வளர்த்திடும் தேவியவள்.       2

பக்தி நிறைந்தது தமிழ் மொழியே
பரமனைத் தொடர்வது தமிழ் மொழியே
சக்தி கொடுப்பவள் தமிழ்த் தாயே
சமரசம் உரைப்பவள் தமிழ்த்தாயே.       3

வண்ணம் மிகுந்திடும் மனமுடையாள்
வாய்மையை வணங்கும் இனமுடையாள்
தண்மை அளித்திடும் இலக்கியத்தாள்
தாரணி புகழ்ந்திடும் இலக்கணத்தாள்.       4

மாநிலம் முழுதும்ஓர் சமுதாயம்
மக்களுக் கெல்லாம் ஒருநியாயம்
தானென அறிஞர்கள் தலைவணங்கும்
தருமம் வளர்த்தவள் தமிழணங்கே.       5