தாழ்ந்தவர் என்பவர் இங்கில்லை; தரித்திரம் நமக்கினிப் பங்கில்லை; வாழ்ந்திடும் வரையிலும் புகழ்செய்வோம் வானிலும் உயர்வாய் வாழ்ந்திடுவோம். (தேசத்)10குறிப்புரை:- சத்திய வாழ்வு - உண்மையான வாழ்வு; சாந்தம் -அமைதி. 80. கண்டதுண்டோ சொல்லுவீர்? பல்லவி கண்டதுண்டோ சொல்லுவீர் - எங்கள் காந்தியைப் போல்ஒரு சாந்தனை இவ்வுலகம் (கண்) அநுபல்லவி எண்டிசை எங்கணும் மண்டலம் முழுதிலும் இந்தச் சரித்திரம்போல் எந்தக் கதையும் உண்டோ? (கண்) சரணங்கள் பண்டைக் கதைஎதிலும் படித்திலம் இவர்போல் பக்தி வைராக்கியம் சுத்தச் செயல்படைத்தோர் தொண்டர் குலத்துக்கெல்லாம் துணைதரும் பெருந்தவம் துறந்தவர் யாவரினும் சிறந்திடப் பிறந்தவர். (கண்)1 சித்தத்தைச் சுத்திசெய்ய மெத்தச் சிறந்தவழி சித்தன்இக் காந்தியின் பக்தி புரிவதுதான் நித்தம் ஒருதடவை காந்தியை நினைத்திடில் நிச்சயம் இப்பிறப்பின் அச்சம் அகன்றுவிடும். (கண்)2 ராமன் பெயரைச் சொல்லி எமனை எதிர்த்தவர் ரகுபதி ராகவரின் வெகுமதி பலித்தவர் தேமொழி ராமபக்தன் த்யாகைய சாமியைப்போல் திவ்விய பகுளபஞ்சமிதனில் தேகம் விட்டார். (கண்)3 குறிப்புரை:- தேகம்விட்டார் - பூதவுடலை நீத்தார். |