புலவர் சிவ. கன்னியப்பன் 229

பொங்கிவரும் விஞ்ஞானப் புதுமை கண்டு
       புத்திகெட்டு மெய்ஞ்ஞானம் போய்விடாமல்
எங்கள்திருத் தமிழ்நாட்டின் தெய்வ பக்தி
       என்றென்றும் குன்றாமல் இருக்கு மாறும்
எங்குமிந்த உலகிலுள்ள மக்களெல்லாம்
       இன்பமுற அன்புடனே குலவு மாறும்
பொங்கலென்று போற்றுமிந்தப் புனித நாளில்
       புண்ணியத்தை நாடுகின்ற எண்ணம் கொள்வோம்.       2

மேதினியில் வேற்றுமைகள் இருந்தே தீரும்
       மெய்இதனை ஐயமறத் தெளியச் செய்து
சாதிமத வேற்றுமையை மிகைப் படுத்திச்
       சண்டைகளை முட்டுவதைத் தவிர்க்கு மாறும்
ஓதிஉணர்ந் தறிவதறிந்த முன்னோர் கண்ட
       ஒற்றுமையை வேற்றுமையில் உணரு மாறும்
ஆதிபரம் பொருளிடத்தில் வரங்கள் கேட்போம்
       அதுவேநாம் பொங்கலிலே அடையும் நன்மை.       3

குறிப்புரை:- மேதினியில் - உலகில்; குலவு - கொண்டாடு;
சர்வேசன் - முழுமுதற்கடவுள்,எங்கும் நிறை இறைவன்.

169. வாழிய பொங்கல்

பழையன கழியப் புதியன மலியத்
தழைத்துப் பூத்துத் தருமம் கனிந்து
விழவுகள் பாடி விருந்தொடும் உண்டு
முழவொலி மனைதொறும் முழங்கிடும் பொங்கல்!       1

சத்தியம் நிலவச் சாந்தமே குவை
உத்தம போதனை ஒப்பிலாச் சமரசம்
இத்தரை முழுதும் எங்கணும் பரவப்
பத்தியில் பரமனைத் தொழுதிடப் பொங்கல்!       2