284நாமக்கல் கவிஞர் பாடல்கள்

முந்தியிந்த உலகத்தில் எவருங் காணா
       முற்றுமொரு சன்மார்க்க முறையைத் தந்த
தந்தையெங்கள் காந்தியண்ணல் தலைமை யின்கீழ்
       தரணிமெச்சும் சாந்தநெறி நின்ற தாலே
வந்தஇந்த சுதந்தரத்தை வணங்கிக் காத்து,
       வையமெங்கும் அமைதிவரும் வழியே நாடி,
எந்தஒரு நாட்டோடும் பகையில் லாமல்
       எவ்வெவர்க்கும் நலங்கருதி இனிது வாழ்வோம்.       24

183. காந்தி சரித்திர நொண்டிச் சிந்து

காந்தியின் சரிதம்சொல்வேன் - நல்லோர்
காதுக் கினிப்ப(து) அதைக் காட்டிலும் முண்டோ?
மாந்தர்க்குயர் தர்மமெல்லாம் - காந்தி
மாத்மாவின் வாழ்க்கையிலே மலிந்திருக்கும்.
புண்ணியக் கதைஇதுவே - கேட்டால்
பூதலத்தில் மூர்க்கருக்கும் பொறுமை வரும்.
கண்ணியம் கனதையென்று - பழைய
கதைகளில் முன்புநாம் கேட்டன வெல்லாம்
சத்தியம் வடிவெடுத்து - வேதம்
சாந்தி சாந்தியென்ற சாந்தத்துடனே.       5

இக்கரையிற் கண்டுகளிக்க - இன்னும்
இருந்தே அறந்தருமோர் பெருந்தகையார்
கூர்ஜா வடநாட்டில் - நல்ல
குணமிகும் போர்பந்தர் சமஸ்தானம்
தார்முடி மன்னர்க்கு - ராஜ
தந்திர முரைக்குந்திறல் மந்திரிகளாய்
வாழ்ந்தவர் பரம்பரையில் - குஜராத்
வாணிய குலத்துக்கோர் ஆணியெனலாம்
கரம்சந்த் என்பவரின் - மனைவி
கற்பில் அருந் ததியென்னும் பொற்புடையவர்.       10