புலவர் சிவ. கன்னியப்பன் 355

மாந்தருக்கு அறிவு காட்டும்
       மாபெரும் சோதி யாக
தேர்ந்துள நமது நாட்டின்
       சுதந்தரம் நிலைக்க வேண்டும்.       4

பாரினில் ஒருநா டேனும்
       நம்மிடம் பகைகொள் ளாமல்
சீரிய முறையில் ராச
       நீதியின் செம்மை காத்துப்
போரிட நினைப்பார் உண்டேல்
       புலிகண்ட மான்போல் அஞ்சத்
தீரமாய் நமது நாட்டின்
       சுதந்தரம் திகழ வேண்டும்.       5

ஆயுத வெறிகள் மிஞ்சி
       அழிவுக்கே முனைந்து நிற்கும்
தீயன குறிகள் கண்டே
       உலகெலாம் திகைக்கும் துன்பை
நாயகன் காந்தி தந்த
       நன்னெறி தன்னைக் காட்டும்
தாயகம் நமது நாட்டின்
       சுதந்தரம் தடுக்க வேண்டும்.       6

219. சுதந்தரச் சபதம்

அன்னியர்கள் நமை ஆண்ட அவதி நீங்கி
       அரசுரிமை முழுவதையும் அடைந்தோம் நாமே
என்னினும்ஏன்? சுதந்தரத்தின் இன்பம் காண
       எவ்வளவோ மனமாற்றம் இன்னும் வேண்டும்;
தன்னலமே பெரிதாகக் கருதி டாமல்
       பொதுநலமே தன்னலமாய்த் தரிக்க வேண்டும்;
பொன்னின்உயர் சுதந்தரத்தைப் பாதுகாக்கப்
       பொறுப்புணர்ந்து கடமைகளைப் புரிய வேண்டும்.       1