19. தமிழன் பெட்பு தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடை வழியாகும்; அன்பே அவனுடை மொழியாகும். 1 அறிவின் கடலைக் கடைந்தவனாம்; அமிழ்தத் திருக்குறள் அடைந்தவனாம்; (1)பொறியின் ஆசையைக் குறைத்திடவே பொருந்திய நூல்கள் உரைத்திடுவான். 2 கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்; புவியில் இன்பம் பகர்ந்தவெல்லாம் புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான். 3 "பத்தினி சாபம் பலித்துவிடும்" பாரில் இம்மொழி ஒலித்திடவே சித்திரச் சிலப்பதி காரமதைச் செய்தவன் துறவுடை ஓரரசன். 4 சிந்தா மணி, மணி மேகலையும், பத்துப் பாட்டெனும் சேகரமும், (2)நந்தா விளக்கெனத் தமிழ் நாட்டின் நாகரி கத்தினை மிகக்காட்டும். 5 தேவா ரம்திரு வாசகமும் திகழும் சேக்கி ழார்புகழும் ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள் உரைகளும் தமிழன் வாழ்வாகும். 6 தாயும் ஆனவர் சொன்னவெலாம் தமிழன் ஞானம் இன்னதெனும்; பாயும் துறவுகொள் பட்டினத்தார் பாடலும் தமிழன் பெட்பெனலாம். 7 |