36நாமக்கல் கவிஞர் பாடல்கள்

19. தமிழன் பெட்பு

தமிழன் என்றோர் இனமுண்டு;
       தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடை வழியாகும்;
       அன்பே அவனுடை மொழியாகும்.       1

அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
       அமிழ்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
(1)பொறியின் ஆசையைக் குறைத்திடவே
       பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.       2

கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்
       கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்;
புவியில் இன்பம் பகர்ந்தவெல்லாம்
       புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.       3

"பத்தினி சாபம் பலித்துவிடும்"
       பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதைச்
       செய்தவன் துறவுடை ஓரரசன்.       4

சிந்தா மணி, மணி மேகலையும்,
       பத்துப் பாட்டெனும் சேகரமும்,
(2)நந்தா விளக்கெனத் தமிழ் நாட்டின்
       நாகரி கத்தினை மிகக்காட்டும்.       5

தேவா ரம்திரு வாசகமும்
       திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
       உரைகளும் தமிழன் வாழ்வாகும்.       6

தாயும் ஆனவர் சொன்னவெலாம்
       தமிழன் ஞானம் இன்னதெனும்;
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
       பாடலும் தமிழன் பெட்பெனலாம்.       7