74நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சேவைகள் செய்தாற் போதும்;
              தெய்வத்தைத் தெரிவோம்; என்று
       தெளிவுறக் காட்டி னாய்உன்
              தினசரி வாழ்க்கை தன்னால்;
தீவினை இருட்டைப் போக்கிச்
              செகமெலாம் விளங்கும் ஞான
       தீபமே! ராம கிருஷ்ண
              தேவனே! போற்றி போற்றி!       6

குறிப்புரை:-செகமெலாம் - உலகெலாம். (6)புண்பட -
வருத்தப் படும்படி; புகன்றிடாமல் -சொல்லாமல் (6);
மதன ரூபம் - அழகிய வடிவம். (5) அகந்தை - செருக்கு,
கர்வம். (5)

39. ஊனொடு உயிர் கலந்த ஒழுக்கம்

எல்லா மதத்தினரும் கூடுவோமே
       ஏகம் கடவுளென்று பாடுவோமே;
நல்லார் உலகிலெங்கும் சொன்னதொன்றே
       ராமகிருஷ்ணர் வாழ்க்கையால் கண்டோ மின்றே.       1

இற்றைக்கு நூறாண்டு முன்னம்ஒருநாள்
       இந்நாட்டின் தெய்வீகத் தன்மைகளெல்லாம்
புத்தம்புதுஉருவில் தேவையறிந்தே
       போந்ததென ராமகிருஷ்ண தேவர்பிறந்தார்.       2

பள்ளிப் படிப்பெதுவும் இல்லாமலும்
       பாடமும் வேறொருவர் சொல்லாமலும்
வெள்ளம் பலநிறைந்த கடலேபோல்
       வெவ்வேறு மதங்களுக் கிடமானார்.       3

தானே நினைத்தறியும் படிப்பன்றோ
       தன்னை தேற்றுவித்த முடிப்பாகும்?
ஊனோ டுயிர்கலந்த ஒழுக்கமன்றோ
       உண்மை ராமகிருஷ்ணர் வழக்கமெல்லாம்?       4