பக்கம் எண் :

82
சங்கீதத்தைப் பற்றிச்சொல்லும் பூர்வ தமிழ் நூல்கள் இன்னின்னவென்பது.

"அகத்தியம் :- இஃது இயல் இசை நாடகமென்னும் முத்தமிழிலக்கணத்தையும் தெரிவிப்பதாகிய ஒரு பெரிய இலக்கண நூல்; தென்மதுரைக்கணிருந்த தலைச்சங்கப் புலவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவரா லருளிச் செய்யப்பட்டது. இது நச்சினார்க்கினியார் காலத்திலேயே இறந்து போயிற்றென்று தெரிகிறது. ஆயினும் இதிலுள்ள சில சூத்திரங்கள் மட்டும் பழையவுரைகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன.

இசை நுணுக்கம் :- இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரனென்பவன் இசையறிதற்பொருட்டு, அகத்தி முனியவர் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவராகிய சிகண்டியென்னும் அருந்தவமுனிவரால் வெண்பாவாலியற்றப் பட்ட இசைத் தமிழ்நூல்; இஃது இடைச்சங்கமிருந்த காலத்துச் செய்யப்பட்டதென்று அடியார்க்கு நல்லாருரையாலும், அச்சங்கப் புலவர்க்கு நூலாகவிருந்ததென்று இறையனாரகப் பொருளுரையாலும் தெரிகிறது.

இந்திரகாளியம் :- இது யாமளேந்திரரென்னும் ஆசிரியராற் செய்யப்பட்ட இசைத்தமிழ்நூல்; அடியார்க்கு நல்லார் உரையெழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்ட நூல்களுளொன்று.

குணநூல் :- இது நாடகத்தமிழ் நூல்களுளொன்று. இதிலுள்ள சில சூத்திரங்கள் மட்டுமே நடைபெறுகின்றனவென்றும் நூல் இறந்துபோயிற்றென்றும் அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர்.

கூத்தநூல் :- இது நாடகத்தமிழ் நூல். இதன் வரலாறு வேறொன்றுந் தெரியவில்லை.

சயந்தம் :- இது நாடகத்தமிழ் நூல்களுளொன்று. இதிலுள்ள சூத்திரங்களிற் சில நடைபெறுகின்றனவன்றி நூலின் முதனடுவிறுதி காணாமையின் இந்நூல் இறந்தது போலுமென்று அடியார்க்கு நல்லா ரெழுதியிருக்கின்றனர்.

செயிற்றியம் :- இது செயிற்றியனாரென்னும் ஆசிரியராற் சூத்திரரூபமாக இயற்றப்பட்ட நாடகத் தமிழ் நூல். இதின் சூத்திரங்களிற் சில நடைபெறுகின்றனவன்றி நூலின் முதனடுவிறுதி காணாமையின் இறந்தது போலுமென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர்.

தாளவகையோத்து :-இது தாளவிலக்கணத்தைக் கூறு நூல்களுள் ஒன்று. இதன் வரலாறு வேறொன்றுந் தெரியவில்லை.

நூல் :- இது நாடகத்தமிழ் நூலுளொன்றன் பெயரென்று மட்டுந்தெரிகிறது. இதன் வரலாறு வேறு யாதொன்றுந் தெரியவில்லை.

பஞ்சபாரதீயம் :- இது தேவவிருடி நாரதன் செய்த இசைத் தமிழ்நூல்; தம்முடைய காலத்திலேயே இந் நூலிறந்து போயிற்றென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர்.

பஞ்சமரபு :- இஃது அறிவனாரென்னும் ஆசிரியராற் செய்யப்பட்ட இசைத் தமிழ்நூல். சிலப்பதிகாரவுரை எழுதுவதற்கு அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் கொண்ட நூல்களுளொன்று.

பரதசேனாபதீயம் :- இஃது ஆதிவாயிலாரென்னும் ஆசிரியரால் வெண்பாவாற் செய்யப்பட்ட நாடகத்தமிழ் நூல்; சிலப்பதிகாரவுரை யெழுதுவதற்கு அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் கொண்ட நூல்களுளொன்று.

பரதம் :- இது நாடகத்தமிழ் நூலுளொன்று; இதனை இறந்துபோன நூல்களுள் ஒன்றாக அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர்.

பெருங்குருகு :- இது தலைச்சங்கப் புலவரியற்றிய இசைத் தமிழ் நூல்களுளொன்று; இந்நூல் தமது காலத்தேதானே இறந்து போயிற்றென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர். இது முதுகுருகென்றும் சொல்லப்படும்.

பெருநாரை :- இது தலைச்சங்கப் புலவரியற்றிய இசைத்தமிழ் நூல்களுளொன்று; அடியார்க்கு நல்லார் காலத்தேதானே இஃது இறந்துபோயிற்றென்று தெரிகிறது.

மதிவாணர் நாடகத் தமிழ்நூல் :- இது சூத்திரப்பாவாலும் வெண்பாவாலும் மதிவாணனாரென்னும் பாண்டியரொருவராற் செய்யப்பட்ட நாடகத்தமிழ் நூல்; அடியார்க்கு நல்லார் உரை யெழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்ட நூல்களுளொன்று.