| 1 | பூமியையோர் சுரபியெனப் பரதமதின் மடியென்னப் பொலிதென் னாடு தேமலிபாற் சுரையென்ன வறிஞர்புகல் வளஞ்சிறந்த செழியர் நாட்டின் மாமலிபூந் தடச்சாம்பூர் வடகரையாந் திருநகரின் மாட்சி மேவும் பாமலிசீர் பெறுசான்றோர் பலருள்ளுஞ் சான்றோனாம் பான்மைமிக்கோன். |
| 2 | தவமருவும் பாலசுப்பி ரமணியமா லீன்றமுத்து சாமி வேளு முவமையிலா வன்னம்மா ளும்புரிந்த நலந்திரண்டோ ருருவ மாகிக் குவலயத்தி லுதித்தென்ன வந்தமுதற் குமரனுயர் குணங்கள் யாவு மிவனிடத்து வளரவளர்ந் தெண்ணில்கலை நிறைவுறப்பெற் றிலங்குஞ்சீலன். |
| 3 | மென்மதுர வாக்குடையான் மிளிருமுழு மதிக்குடையான் மேவலார்செய் வன்மைமிகு செயற்குடையான் மாழைநூ லரைக்குடையான் வரையா தென்றும்நன்மைசெயத் தாமதியான் நலமிலரை யுளமதியா னன்னூல் கூறுந் தன்மையெலா நிறைமதியான் றகவில்வினை சம்மதியான் றயவானமிக்கான். |
| 4 | ஐந்தருவோ விருநிதியோ மாமணியோ கருமுகிலோ வாவோ யாவு மிந்தவுல கினிலொன்றா யடுத்தாலு மிணையாகா வீகை மேலோன் செந்தமிழாங் கிலமாதி பலபாஷா பண்டித விசேட சீலன் சந்ததமும் பிறர்க்குதவி செய்வதிலே மனஞ்செலுத்துந் தரும வள்ளல். |
| 5 | கனவினிலு மறவாது கடவுளடி மலர்பேணுங் கருத்த னின்சொல் மனவமைதி பொறுமையன்பு வாய்மைவிடா முயற்சிமன மகிழ்ச்சி நல்லோ ரினமருவி யிருத்தலெளி யவரிடத்தி லிரக்கமிவை யெல்லாங் கொண்ட தனதனிகர் ஆபிரகாம் பண்டித குணாகர வுதார தீரன். |
| 6 | பூருவத்துப் புண்ணியத்தாற் றானினைத்த நன்மையெலாம் பொருந்தச் செய்ய நேரடுத்த துணைவியாய்க் கற்பினுக்கோ ரணியாகி நிலங்கொண் டாடும் பேர்படைத்து மிளிர்ஞான வடிவுபொன்னம் மாளுடனே பெரிதாங்கல்வி சீர்பெறப்போ தனைபுரியுந் தொழிலேற்றுத் தஞ்சைநகர் சிறப்ப வந்தான். |
| 7 | தண்டமிழி னிலக்கியமு மிலக்கணமும் பிறநூலுந் தகவி னாய்ந்து கொண்டுசெவி வழிப்புகுந்து மனத்துறைந்து கரும்புகனி கோற்றே னற்கற்கண்டமுத மெனவினிக்குஞ் சங்கீதத் துறைதேர்ந்து களிப்பு மேவி யெண்டிசையு மிசைபடைத்தான் ஆபிரகாம் பண்டிதப்பே ரிசைவல்லோனே. |
| 8 | நீரரிதாய்க் கல்லுமுள்ளு நிறைவதலாற் புல்லுமிலா நிலங்கள் வாங்கி யாருமிக வதிசயிப்பக் கிணறுகள்வா விகள்தோண்டி யகிலத் தெங்கும் பேரிருக்க மாபலா தென்னைமுதற் சோலைவளம் பெருகச் செய்து வாரமிக்க வளமருத வைப்பாக்கிச் சிறந்ததொழில் வலிமீக்கொண்டோன். |