சிலப்பதிகாரம் அரும்பதவுரை, பக்கம் 31. வரன் முறையாவது முன் கூறின வகையே ஐந்தா நரம்பா முறைமையின், இளிகுரலாக ஏழு நரம்பும் வாசித்தாளென்க. குரல் குரலாகவும் குரல் தாரமாகவும் வாசித்தாளென்றவாறு. பகை ஆறும் மூன்றும்; "நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ் சென்றுபெற நிற்பது கூட மாகும்" கூடமெனினும் பகையெனினு மொக்கும். நட்பு நாலா நரம்பு. * கிளை ஐந்தா நரம்பென்றும் பகை ஆறா நரம்பென்றும் பிரதிபேதமுண்டு. இது மகா மகோபாத்தியாயர் மகா- - -ஸ்ரீ சாமிநாத ஐயரவர்கள் குறிப்பு. சிலப்பதிகாரம் அரும்பதவுரை, பக்கம் 29. இளி கிளையிற் கோடல்-நின்ற நரம்பிற்கு ஆறாநரம்பு பகை; அது கூடமென்னும் குற்றம்; இளி முதலாகக் கைக்கிளை யாறாவதாம். இளிக்குக் கைக்கிளை பகையென்றது. தங்கள் மயக்கத்தாலே பகைநரம்பிலே கைசென்று தடவ. சிலப்பதிகாரம் வேனிற்காதை, பக்கம்201. "கூட மென்பது குறியுற விளம்பின் வாய்வதின் வராது மழுங்கியிசைப் பதுவே" "மன்னிய விசைவ ராது மழுங்குதல் கூடமாகும்" இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் வாக்கியங்களால் பூர்வ காலத்தில் கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவந்த சுரங்களில் இன்னிசை பிறப்பதற்கென்று காலம் பருவம் சமயம் பொருள் பற்றிய இராகங்களைப் பாடும்பொழுது அவைகளுள் இணைநரம்புகள் அதாவது இணைச் சுரங்கள், கிளைச் சுரங்கள், பகைச்சுரங்கள், நட்புச் சுரங்கள் என்று நாலு விதமான முக்கிய அம்சங்கள் கவனிக்கப்பட்டு வந்தனவென்று தோன்றுகிறது. 2. இணைச் சுரம் இன்னதென்பது. இவற்றுள் இணை நரம்பென்பது யாதென்று பார்ப்போம். இணை என்றால் இரண்டு நரம்புகள், இசைந்த நரம்புகள், பொருத்தமுள்ள சுரங்கள் என்று பொருள்படும். இது ச-ப முறைப்படி உண்டான சுரங்களுக்குப் பேர். எவைகள் ச-ப வைப்போல் பொருத்தமுடையனவாயிருக்கின்றனவோ அவைகள் இணைச்சுரங்களாம். தாரத்தினின்று ஏழாவது இராசியில்வரும் உழையும் (நி-ம) உழையினின்று ஏழாவது இராசியில் வரும் குரலும் (ம-ச) குரலினின்று ஏழாவது ராசியில் வரும் இளியும் (ச-ப) இளியினின்று ஏழாவது இராசியில் வரும் துத்தமும் (ப-ரி) துத்தத்தினின்று ஏழாவது இராசியில் வரும் விளரியும் (ரி-த)
|