பூங்கொடி :
ஏனில்லை! கோழியைவிடவா நாம் குறைந்து போய்விட்டோம்?
மண்டபம் காக்கும்
மாபெரும் பணியில் என்னுயிரையும் இழக்க நான்
தயார்!
பொன்னி :
குழையெறிந்து கோழி யோட்டிய கோதையின் வளமையைப்
பாடும் பட்டினப்பாலையை
மறக்க முடியுமா? அதற்கு நம் சோழன்
அளித்த பரிசை அழிக்கப் பாண்டியனுக்கு என்ன துணிவு! நானும்
வருகிறேன்! என்னுயிரையும் தருகிறேன்!
கமலை :
நானும் வருகிறேன்! என்னுயிரையும் தருகிறேன்.
பலர் :
நானும் வருகிறேன்! என்னுயிரையும் தருகிறேன்!
அன்னம் :
பொங்கியெழும் மங்கையர்களே! உங்கள் வீரத்தின் துணையால்
பரிசில் மண்டபத்தின்
வீழ்ச்சியைத் தடுக்கலாம்! வாருங்கள் என்னோடு!
[பெண்கள் வரிசை வரிசையாக வருகிறார்கள். அவர்க்கிடையே நிறைமாதக்
கர்ப்பிணியான
காவேரியைக் கண்ட அன்னம் அவளைத் தடுத்து
நிறுத்துகிறாள்]
அன்னம் :
சகோதரி, சகோதரி....
காவேரி :
(நின்று) என்னம்மா?
அன்னம் :
நீயுமா என்னுடன் வருகிறாய்?
காவேரி :
ஏன், வரக்கூடாதா? நான் இந்த மண்ணிலே வாழ்பவளல்லவா?
எனக்கு மானமில்லை என்று
நினைத்துவிட்டாயா?
அன்னம் :
வாயும் வயிறுமாகத் தாயாகும் நிலையில் இருக்கிறாயே; சகோதரி,
நீ இங்கேயே
இருக்கலாமே. |