பக்கம் எண் :

110வளவன் பரிசு

படைவீரன்-2 : பொண்ணுங்களா, நீங்க எப்படி இவ்வளவு உயரமான
   மண்டபத்திலே ஏறினீங்க? என்னமோ தேர்த்திருவிழா பார்க்க
   தெருவோரத்து மாளிகையின் கூரையிலே ஏறுவதைப்போல ஏறி
   நிற்கிறீங்களே! நீங்கள்ளாம் எப்போது ஏறினீங்க?

   [படைவீரன்-1ம். படைத்தலைவனும் வருகிறார்கள்.]


படைத்தலைவன் : இரவு முழுவதையும் நீங்கள் வேடிக்கை விளையாட்டிலே
   கழித்தால், இவர்கள் எப்போது ஏறினார்கள், எப்படி ஏறினார்கள்
   என்பதெல்லாம் எப்படித் தெரியும்?

படைவரன்-2 ; தலைவரே, இப்படிப் பொம்பளைங்க கூட்டமா, இந்த
   மண்டபத்திலே ஏறி நிற்பாங்கன்னு நான் நினைக்கலே! ஏன், நீங்களும்
   நினைச்சிருக்க மாட்டீங்க.

படைவீரன்-3 : (பாடுகிறான்) மண்டபத்து மேலே மங்கையர் கூட்டம்,
   மலையிலே நிறைந்த மயில்களின் ஆட்டம்!

படைத்தலைவன் : யாரடா அவன், கவிதை புனைவது?
  
   [தலைவர் சத்தமிட்டதும் பாடல் நிற்கிறது. அமைதி நிலவுகிறது.
   தலைவன் அண்ணாந்து மண்டபத்தின் சிகரத்தைப் பார்க்கிறான்.]

படைத்தலைவன் : எவ்வளவு உயரமா? இதன் மேலே பெண்கள் எப்படி
   ஏறினார்கள்? (உரக்க) பெண்களே, நீங்கள் எப்படி மண்டபத்து மேலே
   போனீர்கள்? மேற்றளம் போகப் படிகள் ஏதும் இல்லையே!