புவன :
(உரக்க) சக்கரவர்த்திகளே!
இராசராசர் :
(திடுக்கிட்டு) யாரது? (மனைவியைக் கண்டு) ஓ, நீயா?
புவன :
ஆமாம் சக்கரவர்த்திகளே! ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது
‘மன்னவா’ என்றழைத்தேன். அது உங்கள் செவியில் விழவில்லை.
சக்கரவர்த்திகளே என்றழைத்தேன். அதுதான் உங்கள் செவியில் பட்டது.
சிந்தனையைத் தொட்டது. இளவரசராயிருந்த தாங்கள் இராசராசச்
சக்கரவர்த்திகளாக ஐந்து நாளுக்குமுன் முடிசூட்டிக் கொண்டீர்கள். அதன்
பின்னும் நான் ‘மன்னவரே’ என்றழைக்கலாமா! வேண்டுமானால் ‘என்னவரே’
என்று அழைக்கலாம்.
இராசராசர் :
தேவி, இயலும் இசையும் இணைந்தவள் நீ; செந்தமிழ்ப்
புலமையில் தேர்ந்தவள் நீ; அதனால் சுவை சேரப் பேசுகிறாய். நான்
சக்கரவர்த்தி என்னும் பட்டத்தைப் பெயரளவில்தான் பெற்றேன். அதற்கேற்ற
ஆற்றல், அனுபவம், அரசியலறிவு-எதுவுமே என்னிடமில்லையே......
புவன :
சோர்வோடு பேசுகிறீர்களா?
இராசராசர் :
இராசராசர் என்னும் பெயரைப் பட்டப் பெயராகச்
சூட்டிக்கொண்டேன். அந்தப் பெயரைத் தாங்கும் தகுதி உண்டா எனக்கு?
சுந்தர சோழரின் மைந்தர் இராசராசர் தமிழ்நிலம் முழுவதையும்
தன்னடிப்படுத்தினார். எட்டியிருக்கும் ஈழத்தையும் சோழ நாட்டின் ஒரு
மண்டலமாக இணைத்து ஆண்டார். இராசராசேச்சுரம் என்னும் கோயில்
அமைத்துப் புகழ் கொண்டார். அவருக்குப் பின்னே |