பக்கம் எண் :

124வளவன் பரிசு

   பேரரசே, நீங்கள் இவருக்குத் தீங்கு செய்யமாட்டீர்கள் என்ற திட
  நம்பிக்கையில் உண்மையை ஒளிக்காமல் சொல்கிறேன்! இவர், பரிசில்
  மண்டபம் வழங்கிய வளவன் கரிகாலன் வழி வந்தவர்! கண்ணன்
  மண்டபத்தைக் காப்பதில் தன்னுயிர் போனாலும் போகட்டும் என்று, தம்
  பகைவரான உங்கள்முன் அஞ்சாமல் வந்து வாதாடிய இவர், எங்கள்
  சோழ நாட்டு இளவரசன் இராசேந்திரர்!

சு. பாண்டியர் : இராசேந்திரன்! காரணை விழுப்பரையரே, கண்டீரா இதை!
  பைந்தமிழ்ப் பற்றில் பாண்டியர்களை இந்தச் சோழர்கள்
  வென்றுவிட்டார்கள்.

இராசேந்திரன் : பாண்டிய வேந்தரே. பட்டினப்பாலைப் பரிசில்
  மண்டத்தைக் காக்கக் கட்டளையிடுவதாகச் சொன்னீர்கள். கதிரவன்
  மறைவதற்குள் கட்டளை உறையூரை எட்டவேண்டும். இல்லையேல்
  எங்கள் முயற்சி வீணாகும்! மண்டபம் வீழ்ந்துவிடும்!

சு. பாண்டியர் : தமிழ் மண்டபம் காக்க நானே நேரில் வருகிறேன்! அந்தப்
  புகழ் மண்டத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மேலிடுகிறது!
  காங்கேயரே, மிக வேகமாகத் தேரோட்டும் பாகன் யார்? அவனை
  வரவழையுங்கள்!

மழவர் மாணிக்கம் : மன்னர் மன்னவா, தேரோட்டுவதில் நான் நளனுக்கு
  நிகரானவன் என்று எல்லோரும் என்னைப் புகழ்வதைக் கேட்டதில்லையா?
   தமிழ் மண்டபம் காக்கப் புறப்படும் உங்களை ஏற்றிச் செல்லும் தேரைச்
  செலுத்துவதைப் பாக்கியமாகக் கருதுகிறேன். எனது தேர் உறுதியானது!
  பாறையில் மோதினால் அது துகளாகுமே தவிர, சக்கரத்தின் ஓட்டம்
  தடைப்படாது. என் தேரில் வாருங்கள்! என் தேர் இரு நாழிகையில் ஒரு
  காவதத்தை எளிதில் கடக்கும்.