படைவீரன் -3 :
(பாடுகிறான்)
பட்ட மரமெனப் பழிதூற்று வோனை
வெட்டிச் சாய்ப்பேன்! விலாவை நொறுக்குவேன்
படைவீரன் -2 :
ஏய் நிறுத்துடா! உன் பாட்டை! நீ பாடுவதைக் காட்டிலும்
பட்ட மரமாகவே நிற்கலாம்.
படைவீரன் -3 :
தலைவரே, மண்டபத்தை இடிக்கலாமா? தளபதி மழவர்
மாணிக்கம் வந்துவிட்டாரா?
படைத்தலைவன் :
வரவில்லை. நேரமாக ஆக, வேடிக்கை பார்க்கும்
கூட்டம் அதிகமாகிறது.
கோயில்களைத் தவிர மற்றக் கட்டடங்களை
இடிக்கும்படி தான் உத்தரவு. வேறெதற்கும் விலக்கில்லை.
இந்தப்
பெண்களுக்காகப் பயந்து மண்டபத்தை விட்டு வைக்க முடியாது.
கடைசியாக ஒரு முறை எச்சரிக்கை
செய்துபார்க்கிறேன். பெண்கள்
இறங்கினால் சரி. இல்லையென்றால் மண்டபத்தை இடித்துத்தள்ளுங்கள்.
ஒரு போரில் எவ்வளவோ போர் உயிரிழக்க நேருவது இயற்கை. இந்தப்
பெண்கள் பலியாக வேண்டும்
என்று அவர்கள் தலையில்
எழுதியிருந்தால், அதை நம்மால் தடுக்க முடியுமா?
[அண்ணாந்து மேலே பார்த்து]
பெண்களே, இறுதி முறையாக எச்சரிக்கிறேன். இறங்கி வந்துவிடுங்கள்.
பத்து எண்ணுவேன்,
அதற்குள் இறங்க வேண்டும். இல்லையேல் மண்டபம்
இடிக்கப்படும். நீங்கள் கீழே குதித்தோ
மேலே பறந்தோ உங்கள்
முடிவைத் தேடிக்கொள்ளுங்கள்!
அன்னம் :
இரக்கம் மிகுந்த பாண்டிய வீரரே! பத்து நொடி அவகாசம்
எனக்கு வேண்டாம்! இப்போதே
இடிக்கத் தொடங்கலாம்! உயிரை
இழப்போமே தவிர இங்கிருந்து இறங்கி வரமாட்டோம்! உயிரினும்
உயர்ந்தது தமிழ்! தமிழினும் உயர்ந்தது தரணியில் |