திறமை எள்ளாக இருப்பினும் இமயமாக்கிப் புகழும் இயல்பை நான்
அறியமாட்டேனா? அதோ சேவகன் வருகிறான்.
[சேவகன் உள்ளே வருகிறான். வணங்கிய பின் பேசுகிறான்.]
சேவகன் :
மன்னர் மன்னவ, அமைச்சர் பிருமாதிராசர் தங்களைக் காண
வந்துள்ளார்.
இராசராசர் :
வரச்சொல்.
[சேவகன் வணங்கிச் செல்கிறான். சிறிது நேரத்தில் அமைச்சர் பிருமாதிராசர்
வருகிறார்]
பிருமாதிராசர் :
வணக்கம், வேந்தர் பெரும!
இராசராசர் :
அமருங்கள்.
[அமைச்சர் எதிரேயுள்ள ஆசனத்தில் அமர்கிறார்.]
புவன :
அமைச்சரே, முடிசூட்டு விழா உங்களை ஓய்வு உறக்கமில்லாமல்
அலைக்கழித்துவிட்டது போலும்.
பிருமா :
அரசியாரே, நீங்கள் சொல்வது ஓரளவு உண்மை, என்றாலும்
மகிழ்ச்சியான செயலில் ஓய்வில்லாமல் உழைப்பதும் உற்சாகமே தருகிறது!
இராசராசர் :
அமைச்சரே, விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும்
சென்றுவிட்டார்களா?
பிருமா :
சென்றுவிட்டார்கள். சிறிது நேரத்துக்கு முன்னர்தான் பாண்டி
நாட்டுப் பிரதிநிதிகளை வழியனுப்பி விட்டு வருகிறேன். |