பிருமா :
திருமுனைப்பாடி நாட்டுக் கோப்பெருஞ்சிங்கனும் விழாவிற்கு
வரவில்லை. வாணகோவரையர் தம் பிரதிநிதியாகப் படைத்தலைவர்
ஒருவரை அனுப்பினார். கோப்பெருஞ்சிங்கன் அதுவும் செய்யவில்லை.
கப்பம் செலுத்தும் இச் சிற்றரசன் செயல் கண்டிக்கத்தக்கது. கடந்த
மூன்றாண்டுகளாக இவன் கப்பம் செலுத்தவில்லை. தான் யாருக்கும்
அடங்கியவனல்லன் என்று பேசுகிறானாம். தன் நாடு தனியரசு என
அறிவிக்கப் போவதாகவும் செய்தி கிடைத்துள்ளது.
இராசராசர் :
காடவன் கோப்பெருஞ்சிங்கன் நன்றி கொன்றவன். என்
தந்தையார் அவனுக்குச் செய்த உதவிகள் எத்தனை! இருக்கட்டும்!
அப்புறம்...?
பிருமா :
தொண்டை மண்டலத்துச் சிற்றரசன் சம்புவராயன் விழாவுக்கு
வந்திருந்தான். என்றாலும் கோப்பெருஞ்சிங்கனின் ஆப்த நண்பன் என்று
அடிக்கடி சொல்லிக்கொண்டான். வாணகோவரையர் இங்கே வராததற்கும்
காரணம் கோப்பெருஞ்சிங்கன் என்று தெரிகிறது. வாணகோவரையர்,
சம்புவராயன், கோப்பெருஞ்சிங்கன் ஆகிய மூவருக்கும் ஏதோ ஓர் ஒப்பந்தம்
இருக்கும் என்று தோன்றுகிறது. அவர்கள் மிக விரைவில் தம் அரசுகள்
சோழப் பேரரசுக்கடங்காத தனியரசுகள் என்று அறிவிக்கக்கூடும் என்னும்
சேதி கிடைத்துள்ளது.
இராசராசர் :
நம் சிற்றரசர்களே நமக்குப் பகைவர்களாகப் பார்க்கிறார்கள்!
கொஞ்சம் பொறுத்திருப்போம். பிறகு இவர்களுக்குப் புத்தி புகட்டுவோம்.
பாண்டியர்களின் நிலை என்ன?
பிருமா :
பாண்டியனுக்கு நாம் அழைப்பனுப்பியபோது மாறவர்மன்
சுந்தரபாண்டியன் தங்கள் முடிசூட்டு |